ஜூலை 28ல் நடக்கவிருந்த பெங்களூர் மாநகராட்சி தேர்தல் ஒத்திவைப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு
பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சி தேர்தலை 8 வாரங்கள் ஒத்திவைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு்ள்ளது. எனவே, இம்மாதம் 28ம் தேதி நடைபெறவிருந்த தேர்தல் தள்ளிப்போகிறது.
பெங்களூர் மாநகராட்சியின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், ஜூலை 28ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜூன் 25 முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கும் வந்துவிட்டன.
இந்நிலையில், 2011ம் ஆண்டு வெளியாகியுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு படி வார்டுகளை பிரிக்கவும், வாக்காளர் பட்டியலை தயாரிக்கவும் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டு மாநில அரசு தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை நடத்திய நீதிமன்றம், 2001ம் ஆண்டு வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தேர்தலை நடத்துங்கள்., புதிய பட்டியல் தேவையில்லை என்று உத்தரவிட்டது. ஆனால், தேர்தலை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாநில அரசின் கோரிக்கையில் பாதியை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மறுபாதியை தள்ளுபடி செய்துள்ளது. பட்டியலை மாற்ற வேண்டாம் என்று நீதிபதிகள் கூறிய நிலையில், பிறகு எதற்காக தேர்தல் தேதியை ஒத்திவைத்தனர் என்பதற்கான விளக்கம் தரப்படவில்லை.
உச்சநீதிமன்ற உத்தரவால், அக்டோபர் 5ம் தேதிவரை கர்நாடக அரசுக்கு கால அவகாசம் கிடைத்துள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் சுரேஷ்குமார் (பாஜக) கூறுகையில், "உச்சநீதிமன்ற உத்தரவு வித்தியாசமாக உள்ளது. தேர்தல் நடத்தைவிதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு ஒரு தேர்தல் தளளிப்போவது கேள்விப்படாத விஷயமாக உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications