காவிரி: உச்சநீதிமன்றத்தில் மேலாண்மை வாரியம் வரைவு அறிக்கை தாக்கல்
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
Recommended Video
டெல்லி: காவிரி நதிநீரை பகிர்வதற்கான மேலாண்மை வாரியம் குறித்த வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் இன்ற் மத்திய அரசு தாக்கல் செய்தது
காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் தீர்ப்பை 6 வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், கால அவகாசம் முடியும் நாளில் 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மே 3-ஆம் தேதிக்குள் காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
தண்ணீர் தரமுடியாது
ஆனால், மீண்டும் அவகாசம் கேட்ட மத்திய அரசை எச்சரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கு 4 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கர்நாடக அணைகளில் போதிய நீர் இல்லை என்றும் இதனால் தமிழகத்திக்கு தண்ணீர் தரமுடியாது என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
பிரமாணப்பத்திரம் தாக்கல்
உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருவதாக மத்திய அரசு சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய அரசுக்கு உத்தரவு
இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடகா தேர்தலை காரணம் காட்டிய மத்திய அரசு வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது. இதைடுத்து மே 14-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்த சுப்ரீம்கோர்ட் அன்றைய தினம் காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இன்று விசாரணை
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜரானார்.
வரைவு அறிக்கை தாக்கல்
மேலும் காவிரி நதிநீரை பகிர்வதற்கான மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான வரைவு திட்டத்தையும் யுபி சிங் தாக்கல் செய்தார். இவ்வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பாக நடைபெற்று வருகிறது.