ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்களுக்கு வாய்ப்பில்லை!
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட்டில் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு இருக்காது என்று ரயில்வே அமைச்சக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி மாதம் 23ம் தேதி துவங்கக்கூடும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி 26 அல்லது 27ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 29ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளதாம்.
ரயில்வே பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ஈடுபட்டுள்ளாராம். ரயில்வே துறையை நவீனப்படுத்துவது குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
பட்ஜெட்டில் புதிய ரயில்கள் குறித்த எந்த அறிவிப்பும் இருக்காது என்று ரயில்வே அமைச்சக வட்டாரத்தில் கூறப்படுகிறது. ரயில்வே துறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதால் புதிய ரயில்கள் குறித்து சுரேஷ் பிரபு அறிவிப்பு வெளியிட மாட்டாராம்.
இந்நிலையில் பாஜக எம்.பி.க்களில் பலர் தங்கள் தொகுதிகளை இணைக்க புதிய ரயில்களை விடுமாறு சுரேஷ் பிரபுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பயணிகள் ரயில்கள் பலவற்றை பிரீமியம் ரயில்களாக மாற்றுவது குறித்து ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. பிரீமியம் ரயில்களில் சாதாரண ரயில்களை விட 15 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதது.
பிரீமியம் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் ரயில்வே துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.