கார்த்தி சிதம்பரம் மனு ஹைகோர்ட்டில் டிஸ்மிஸ்.. சு.சாமி வரவேற்பு
டெல்லி: கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சென்னை ஹைகோர்ட் விசாரிக்க மறுத்துள்ளது நல்ல விஷயம் என்று பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக கூறி சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் கார்த்தி. ஆனால் இது தங்கள் விசாரணை வரம்புக்குள் வராது என ஹைகோர்ட் கூறியதோடு, டெல்லி பட்டியாலா கோர்ட்டை அணுகுமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு ஆலோசனை வழங்கியது.
இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், சென்னை ஹைகோர்ட் சரியான முடிவைத்தான் எடுத்துள்ளது. கார்த்தி ஒருவேளை பொய் சொன்னால், சிபிஐக்கு அவரை கைது செய்ய அதிகாரம் உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சிபிஐ கைது செய்ய முடியும்.
அதிகாரிகள் தவறு செய்துவிட்டதாக சிதம்பரம் கூறி தப்பிக்க முடியாது. அமைச்சர்தான் அதற்கு பொறுப்பு. கார்த்தி மீதான குற்றச்சாட்டுகளுக்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.