திருச்சி ராமஜெயம் கொலை பாணியில் இலங்கை கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தொழிலதிபர்-போலீஸ் ஷாக்!
கொழும்பு: திருச்சி ராமஜெயம் கொலை பாணியில் இலங்கை தலைநகர் கொழும்பில் தமிழ் தொழிலதிபர் தினேஷ் சாப்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி ராமஜெயம் படுகொலை தொடர்பாக இலங்கையிலும் தமிழக போலீசார் விசாரணை நடத்தியதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியும் இருந்தன.
2012-ம் ஆண்டு திருச்சியில் தொழிலதிபர் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார். தற்போதைய அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான கே.என்.நேருவின் சகோதரர்தான் திருச்சி ராமஜெயம். திருச்சி திமுக மற்றும் கே.என்.நேருவின் அனைத்துமாக செயல்பட்ட ராமஜெயம், இரும்பு முட்கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
கொன்றுகுவித்த அதிமுகவுக்கு துணை போகலாமா? படுகொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்க.. சீமான் ஆவேசம்!
முடங்கிய விசாரணை
திருச்சி ராமஜெயம் படுகொலை தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றும் எந்த ஒரு துப்பும் துலங்கவில்லை. சிபிசிஐடி, சிபிஐ என பல விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் புரியாத புதிராகவே இந்த கொலை வழக்கு விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது ராமஜெயம் கொலை வழக்கு. இந்நிலையில் திருச்சி ராமஜெயம் கொல்லப்பட்ட பாணியில் இலங்கை தலைநகர் கொழும்பில் தமிழ் தொழிலதிபர் தினேஷ் சாப்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கொழும்பு படுகொலை
இலங்கை தமிழர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது தமிழ் தொழிலதிபர் தினேஷ் சாப்டர் படுகொலை. கொழும்பு பொரளை பொதுமயானத்தில் கம்பிகளால் உடல் கட்டப்பட்ட நிலையில், கழுத்து நெறிக்கப்பட்டு தினேஷ் சாப்டர் மீட்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தாமஸ் உட்பட 23 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழ் தொழிலதிபர் படுகொலை ஏன்?
இது தொடர்பாக இலங்கை மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகையில், ரூ143 கோடி கடனை திருப்பி வாங்குவது தொடர்பான விவகாரத்தில்தான் தினேஷ் சாப்டர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அத்துடன் தினேஷ், தாம் காரில் பயணித்துக் கொன்டிருந்த போது லைவ் லொகேஷனை குடும்பத்தினரிடமும் ஷேர் செய்திருந்தார். பொரளை மயமானத்தை சென்றடைந்த நிலையில் தினேஷிடமிருந்து அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. இதனையடுத்தே அப்பகுதியில் தேடுதல் நடத்தப்பட்ட போது, தினேஷ், இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.
ராமஜெயம் பாணியில் கொலை
தினேஷ் சாப்டரின் உடலில் கைகள் பிளாஸ்டிக் கம்பிகளால் கட்டப்பட்டிருந்தன; கழுத்து கம்பியால் கட்டப்பட்டிருந்தது; மார்பு பகுதியும் இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது என்கின்றன ஊடக செய்திகள். இதே பாணியில்தான் திருச்சி ராமஜெயமும் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஏற்கனவே திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக இலங்கை சந்தேக நபர்களுக்கு தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் தமிழக போலீசார் இலங்கை சென்று விசாரணை நடத்தியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது.
ராமஜெயம் கொலையில் இலங்கை தொடர்பு
அதாவது ராமஜெயத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய நபர் அவரிடம் இருந்து ரூ300 கோடி அளவுக்கு கையாடல் செய்திருக்கிறார். இதை தெரிந்த ராமஜெயம் பலரது முன்னிலையில் அந்த நபரை வெளுத்தாராம். அடிபட்ட புலியாக இருந்த அந்த நபர், இலங்கையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் நெருக்கமானாவராம். அந்த பிரமுகரும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருக்கும் தமக்கு தெரிந்த ஆட்களை வைத்து ராமஜெயத்தின் கதையை முடித்திருக்கலாம் என்ற கோணத்தில் இலங்கை சென்றது தமிழக போலீஸ் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இலங்கை கொழும்பில் தமிழ் தொழிலதிபர் தினேஷ் படுகொலை சம்பவமும் ராமஜெயம் கொலை பாணியில் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பாமல் இருக்காது என்கின்றனர் இலங்கை சீனியர் பத்திரிகையாளர்கள்.