ஜல்லிக்கட்டு: தீர்ப்பு அளிக்காமல் ஏமாற்றிய உச்சநீதிமன்றம்- தடையை மீறும் தமிழகம்?
ஜல்லிக்கட்டு வழக்கில் உடனே தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
டெல்லி: ஜல்லிக்கட்டு வழக்கில் இடைக்கால தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது,
தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இது தமிழரின் பண்பாட்டு அடையாளம்.
ஆனால் ஜல்லிக்கட்டு காளைகளை காட்சிபடுத்த தடை விதிக்கப்பட்ட 'விலங்குகள்' பட்டியலில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சேர்த்திருக்கிறது. இதனை காரணம் காட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொந்தளிப்பு
தற்போதைய பாஜக அரசும் காட்சிபடுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க முன்வரவில்லை. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில்...
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் மனுத்தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கில் வரும் தீர்ப்பைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என மத்திய அரசு கூறிவந்தது.

கைவிரித்த சுப்ரீம்கோர்ட்
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றத்திடம் வழக்கறிஞர்கள் இன்று கோரிக்கை வைத்தனர். ஆனால் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் இடைக்கால தீர்ப்பு எதுவும் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துவிட்டது.

மாணவர்கள் போராட்டம்
இதனால் சட்டப்பூர்வமாக ஜல்லிக்கட்டு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராடி வருகின்றனர்.

தடையை மீறும் தமிழகம்
இந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் கைவிரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்த ஆண்டு தமிழகத்தில் உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications