ஜெ. ரிலீஸ் எதிரொலி: தமிழக வாகனங்களை பெங்களூர் எல்லைக்குள் விடாத போலீசார்
பெங்களூர்: ஜெயலலிதா இன்று ஜாமீனில் விடுதலையாக உள்ள நிலையில் சிறைக்கு வெளியே அவருக்கு வரவேற்பு கொடுத்த தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பெங்களூர் வந்தவண்ணம் உள்ளனர்.
சிறைச்சாலை வளாகத்தில் இவர்கள் குவிந்தால் அங்கு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளூர் மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் தொந்தரவு ஏற்படும், போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால், சிறையை சுற்றிலும் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு கூட்டம் சேருவது தவிர்க்கப்பட்டுள்ளது.

இதனிடையே பெங்களூருக்குள் அதிமுகவினர் குவிவதை தடுக்க, ஒசூர் எல்லை, ஆனேக்கல் எல்லை, சர்ஜாப்பூர் உட்பட பெங்களூருக்குள் தமிழகத்தில் இருந்து நுழையக்கூடிய 6 வழிகளிலும் கர்நாடக காவல்துறை சார்பில் செக்போஸ்ட்கள் போடப்பட்டுள்ளன.
ஒசூர் எல்லையில், 1 டிஎஸ்பி, 10 இன்ஸ்பெக்டர்கள், 20க்கும் மேற்பட்ட எஸ்ஐ கள் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததை பார்க்க முடிந்தது. தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களை தணிக்கை செய்து கட்சியினர் போல காணப்பட்டால் அந்த வாகனங்களை போலீசார் திருப்பியனுப்பி வருகின்றனர்.

குடும்பத்தோடு வருபவர்களின் கார்கள் மட்டுமே பெங்களூருக்குள் அனுமதிக்கப்படுகின்றன. தமிழக வாகனங்களை திருப்பியனுப்பும்போது உள்ளேயிருக்கும் தொண்டர்கள், அம்மா வாழ்க, புரட்சி தலைவி வாழ்க என கோஷமிட்டபடியே தமிழகம் திரும்பிவருகின்றனர். தமிழகத்தில் இருந்து இருந்து வேறு பல பணிகளுக்காக பெங்களூர் வருபவர்களுக்கும், இந்த கெடுபிடியால் பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications