மனைவியை குத்தி கொல்ல முயன்ற சாப்ட்வேர் இன்ஜினியர் மர்ம சாவு, மனைவி கவலைக்கிடம்!
டெல்லி: மனைவியை குத்திக் கொலை செய்ய முயன்ற சாப்ட்வேர் இன்ஜினியர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டெல்லியின் துவாரகா செக்டார்-18ல் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் அமித் பச்சன் (32), இவரது மனைவி ஷிவானி. அமித், சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். ஷிவானி, டிராவல்ஸ் ஒன்றில், மூத்த நிர்வாகி பதவியில் உள்ளார். இத்தம்பதிகளுடன், அமித் பச்சனின் தாயார், சந்திரகாந்தாவும் அதே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், அதிகாலை 5 மணியளவில், லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு, ஷிவானி போன் செய்தார். தனது கணவர் தன்னை குத்திக் கொலை செய்ய முயன்றதாகவும், தனது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், போலீசாரிடம் ஷிவானி கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸ் குழு ஒன்று, ஷிவானி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்றபோது, கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால், போலீசார், கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது, கழுத்தில் கேபிள் வயர் கழுத்தில் சுற்றப்பட்டிருந்த நிலையில், அமித் பச்சன் உயிரிழந்து கிடந்தார். அவரது வாயில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
இதையடுத்து படுக்கையறைக்குள் போலீசார் சென்றபோது, அங்கு ஷிவானி ரத்த வெள்ளத்தில், மயங்கி கிடந்தது தெரியவந்தது. மற்றொரு அறையில் சந்திரகாந்தா மயங்கி கிடந்தார். இதையடுத்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் போலீசார். அதில் ஷிவானி நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஐசியூவிலுள்ள ஷிவானியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அவர் கூறியுள்ளதாவது: இரவு மது போதையில் என்னை இரும்பு தடியால் அடித்த அமித் பச்சன், அதைத் தொடர்ந்து கத்தியால் எனது பின்புறம் குத்தினார்.
கணவரிடமிருந்து தப்பிக்க ஓடிச் சென்று படுக்கையறை கதவை தாழிட்டுக்கொண்டேன். ஆனால், ரத்தம் அதிகம் வெளியானதால் மயக்கம் ஏற்பட தொடங்கியது. எனவே, அறைக்குள் இருந்த பிளாஸ்டிக் வாளியை எடுத்து ஜன்னலுக்கு வெளியே வீசினேன். அந்த சத்தம் கேட்டு, குடியிருப்பு காவலாளி எங்கள் வீட்டுக்கு வருவார் என்று எதிர்பார்த்தேன். அப்படியும் யாரும் வராததால், நான் போலீசாருக்கு போன்செய்தேன். இவ்வாறு ஷிவானி கூறியுள்ளார்.
சந்திரகாந்தா போலீசாரிடம் கூறுகையில், அதிகாலை 3 மணியளவில் தனது அறைக்கு வெளியே யாரோ நடப்பது போன்ற சத்தம் கேட்டதாகவும், கதவை திறந்து வெளியேவர முயன்றபோது கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஷிவானியை கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் அமித் பச்சன் இறந்தது எப்படி என்பதில் மர்மம் நீடிக்கிறது. மனைவியை கத்தியால் குத்திய அமித்பச்சன், அதன்பிறகு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம். பாரம் தாங்காமல், வயர் அழுந்து அவர் கீழே விழுந்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது.
ஆனால், மின் விசிறி உடைபடாமலோ, வளையாமலோ இருப்பது மர்ம முடிச்சை அவிழ்க்கவிடாமல் செய்துவருகிறது.