காவிரி நிபுணர் குழு அறிக்கை தாக்கல்... ஒரு பரிந்துரையும் இல்லை... தமிழக விவசாயிகள் பெரும் ஏமாற்றம்!
டெல்லி: காவிரி பாசன பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட உயர்மட்ட தொழில்நுட்ப குழு இன்று தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்தது.
கர்நாடகா மற்றும் தமிழகத்திலுள்ள காவிரி பாசன பகுதிகளில் நீர் இருப்பு மற்றும் நீர் தேவையை ஆய்வு செய்ய, மத்திய நீர்வள கமிஷனர் சி.எஸ்.ஷா தலைமையில், காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இதில்,தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் உயர்அதிகாரிகள் இடம் பெற்றனர்.
தமிழக அரசு சார்பில், பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் இடம் பெற்றனர். உயர்மட்டக் குழுவினர், 7, 8ம் தேதிகளில், கர்நாடக மாநிலத்திற்கு சென்று, அங்குள்ள அணைகள், காவிரி பாசன பகுதிகளை ஆய்வு செய்தனர்.
கடந்த, 9ல், தமிழகம் வந்த குழுவினர், மேட்டூர், பவானிசாகர் அணைகளையும், டெல்டா மாவட்டங் களான, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினத் தில் உள்ள காவிரி பாசன பகுதிகளையும் ஆய்வு செய்தனர். சென்னைக்கு, 11ம் தேதி வந்த குழுவினர், தமிழக அரசின் தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, தமிழகத்தின் தண்ணீர் தேவை குறித்தும், பயிர் பாதிப்பு குறித்தும், 'வீடியோ' ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஆய்வு குழுவினரின் அறிக்கை, உச்ச நீதிமன்றத்தில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை நகல், இரு மாநில வழக்கறிஞர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே நாளை காவிரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது இரு மாநிலங்களும் வாதம் முன் வைக்கப்போகின்றன. தற்போது கிடைத்துள்ள தகவல்படி, தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஆய்வு குழு பரிந்துரை எதையும் தெரிவிக்கவில்லையாம். எனவே நாளை நடைபெறும் வாதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த குழு எந்தப் பரிந்துரையையும் செய்யவில்லை என்பதால் தமிழக விவசாயிகள் பெரும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இந்த அறிக்கை தமிழகத்தை விட கர்நாடகத்திற்கே சாதகமாக இருப்பதாக கருதப்படுகிறது.