விமான என்ஜினில் சிக்கி பலியான தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர்.. ரூ.5 லட்சம் இழப்பீடு; ஒருவருக்கு வேலை
மும்பை: மும்பையில் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த விமான ஊழியரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு வேலையும், ரூபாய் 5 லட்சம் இழப்பீடும் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பை சத்ரபதி சிவாஜி உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று இரவு 8.45 மணியளவில் ஹைதரபாத் செல்வதற்காக ஏ.ஐ. 619 என்ற விமானம் தயார் நிலையில் இருந்தது. இதையொட்டி, விமானத்தின் என்ஜின் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ரவி சுப்பிரமணியன் என்ற தொழில்நுட்ப வல்லுனர் ஒருவர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, என்ஜினில் இருந்து வெளியான அதிகப்படியான காற்று, அவரை சுழற்றி அடித்து கொண்டு உள்புறமாக இழுத்தது.
இதில், அவர் என்ஜினுக்குள் சிக்கி திக்குமுக்காடினார். சம்பவ இடத்திலேயே மரணத்தை தழுவினார். மேலும், அவரது உடல் பல துண்டுகளாக சிதறியது. தகவலறிந்த விமான ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து அவருடைய உடலை மீட்டனர். விமானி ஒருவர் சிக்னலை தவறுதலாக கருதி என்ஜினை இயக்கியதால் ஏற்பட்ட விளைவே இந்த விபத்து என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ரவி சுப்பிரமணியன் மரணம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உயிரிழப்பிற்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.
"எங்களுடைய குடும்ப உறுப்பினர் ஒருவரை நாங்கள் இழந்துவிட்டோம். ரவி சுப்பிரமணியத்தின் மறைவுக்கு இழப்பீடாக ரூபாய் 5 லட்சத்தை அவருடைய குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளோம். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் கொடுக்கப்படும். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆகையால், இந்த தருணத்தில் அதற்கான காரணம் குறித்து நான் கருத்து தெரிவிப்பது முறையாகாது" என்று அந்நிறுவனத்தின் தலைவரும், மேலாண்மை இயக்குனருமான அஷ்வானி லோகானி கூறிஉள்ளார்.