நகைச்சுவையாகத்தான் சீண்டினேன்.. கூறுகிறார் தருண் தேஜ்பால்
மேலும் தன் மீதான இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் பாஜக தலைவர்கள் சிலர் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தான் பாஜகவினரின் பல்வேறு முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் தன்னைப் பழிவாங்க அவர்கள் இப்படி செய்திருப்பதாகவும் தேஜ்பால் கூறுகிறார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேஜ்பால் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனுவுடன் கூடுதல் மனுவாக இதைத் தாக்கல் செய்துள்ளார் தேஜ்பால். அதில், நான் எனது சக ஊழியரை பாலியல் ரீதியாக எதுவும் சீண்டவி்ல்லை. மாறாக நகைச்சுவை உணர்வுடன்தான் பேசினேன், சீண்டினேன். அது அவரது பிரைவசியை பாதிப்பதாக கடைசியில் அமைந்து விட்டது. ஆனால், எனது எண்ணம் தவறானதல்ல, நான் விளையாட்டாகத்தான் அப்படி செய்தேன்.
என் மீதான இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னர் சில பாஜக தலைவர்கள் இருப்பதாக சந்தேகப்படுகிறேன். அவர்களின் பல ஊழல்களை நான் அம்பலப்படுத்தியதால் அவர்கள் என் மீது கோபத்தில் இருந்து வந்தனர். இப்போது இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார் தேஜ்பால்.
ஆனால் தேஜ்பாலின் இந்தப் புதிய கூற்று குழப்பமாக உள்ளது. காரணம், முன்பு அவர் சம்பந்தப்பட்ட பெண் பத்திரிக்கையாளருக்கு அனுப்பிய இமெயில் மன்னிப்பு கடிதத்தில், 2 முறை உங்களிடம் பாலியல் உறவுக்கான முயற்சிகளில் நான் ஈடுபட்ட தவறுக்காக மன்னிப்பு கேட்கிறேன். நீங்கள் தெளிவாக மறுப்பு தெரிவித்தபோதும் நான் தொடர்ந்து முயற்சித்ததற்காக மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியிருந்தார் தேஜ்பால் என்பது நினைவிருக்கலாம்.
தேஜ்பாலின் முன் ஜாமீன் மனு நாளை விசாரிக்கப்படவுள்ளது. ஆனால் அதுவரை அவரைக் கைது செய்ய தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறி விட்டது.