தருண் தேஜ்பால் விவகாரம்.. 4 மூத்த பத்திரிகையாளர் டெஹல்காவில் இருந்து ராஜினாமா
டெல்லி: பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய தருண் தேஜ்பாலுக்கு ஆதரவாக நிர்வாகம் செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4 மூத்த பத்திரிகையாளர்கள் டெஹல்காவில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
டெஹல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது சக பெண் பத்திரிகையாளர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்திருந்தார். ஆனால் நிர்வாகமோ தருண் தேஜ்பாலை காப்பாற்றும் வகையில் அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார், பணியில் இருந்து 6 மாத காலம் தாமாக விலகிவிட்டார் என்று கூறியது.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரும் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொண்டதாகவும் டெஹல்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் டெஹல்காவின் இந்த செயல்பாடுகளுக்கு அந்நிறுவன மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மூத்த ஆசிரியர் ராணா அயூப் மற்றும் ரேவதி லெளல், ஆயிஷா சித்திக் மற்றும் செளகத் தாஸ்குப்தா ஆகிய மூத்த பத்திரிகையாளர்கள் டெஹல்காவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். மூத்த கட்டுரையாளர் ஜெய் மசூம்தாரும் டெஹல்கா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.