தெலுங்கானா உதயமாகி இரண்டாண்டுகள் நிறைவு..தலைநகரில் கோலாகல கொண்டாட்டம் !
ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிந்து தெலுங்கானா தனி மாநிலமாக அந்தஸ்து பெற்று இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி தலைநகர் ஹைதராபாத் நகரம் மின்னொளியில் ஜொலித்தது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பகுதியை பிரித்து தனி மாநிலமாக கடந்த ஆண்டு ஜூன் 2-ந் தேதி உருவாக்கப்பட்டது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது அந்தப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது.

2001-ம் ஆண்டு தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை முன் வைத்து சந்திரசேகரராவ், தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி என்ற கட்சித் தொடங்கினார். இந்தக் கோரிக்கையை முன்வைத்து எத்தனையோ போராட்டங்கள், வன்முறைகள், உயிரிழப்புகள் என அத்தனை சம்பவங்களும் அங்கு நடந்தது.
இதையடுத்து ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானா உதயமாகியது. தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக சந்திரசேகரராவ் பதவி வகித்து வருகிறார். தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது.
இதையொட்டி தலைநகர் ஹைதராபாத் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்குள்ள அரசுக் கட்டடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. அதேபோல், சார்மினார், லும்பினி பார்க், ஹூசைன் சாகர் ஏரியில் உள்ள புத்தர் சிலை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.
2ம் ஆண்டு விழாவை உற்சாகத்துடன் கொண்டாடுவதற்காக ஹைதராபாத்தில் மட்டும் 2 கோடி ரூபாய் செலவில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் தெலுங்கானாவில் உள்ள 10 மாவட்டங்களுக்கும் விழா கொண்டாட்டங்களுக்காக தலா 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநில உருவாக்கத்தின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ஹைதராபாத் நகரில் ஹுசைன்சாகர் ஏரிக்கரையில் உள்ள சஞ்சீவ் பார்க்கில் 290 அடி மிக பிரம்மாண்ட தேசிய கொடியை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ஏற்றி வைத்தார். இதன்மூலம், இந்தியாவில் மிக பிரம்மாண்டமான தேசிய கொடியை பெற்றுள்ள நகரம் என்ற பெருமையை ஹைதராபாத் நகர் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications