சம்பளம் வாங்குறேனே, பிறகெதற்கு அன்பளிப்பு... முதல்வரை அசர வைத்த போலீஸ்காரர்
ஹைதராபாத்: பாஸ்போர்ட் தொடர்பான விசாரணையின் போது அன்பளிப்பு வாங்க மறுத்த போலீஸ்காரரை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் ஜி.நாராயணராவ். நேற்று முன்தினம், இவர் அதே பகுதியில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்த ஒரு குடும்பத்தினரை நேரில் சந்தித்து தகவல்களைச் சரி பார்க்கச் சென்றார்.

விசாரணையின் முடிவில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அக்குடும்பத்தார் நாராயணராவுக்கு ரூ 2500 அன்பளிப்பாக கொடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அன்பளிப்பைப் பெற மறுத்த நாராயணராவ், ‘அரசு எனக்கு சம்பளம் தருகிறது. அதனால் எந்தவித அன்பளிப்புக்கும் தேவை ஏற்படவில்லை. எங்களது தேவைகளையெல்லாம் முதல்வர் தாராளமாகவே செய்து வருகிறார்' எனத் தெரிவித்துள்ளார்.
லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் என நச்சரிக்கும் ஊழல் அதிகாரிகளுக்கு மத்தியில் அன்பளிப்பைப் பெறவே மறுத்து விட்ட நாராயண ராவின் செயல் அக்குடும்பத்தினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அக்குடும்பத்தினர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் குடும்ப மருத்துவருடைய குடும்பமாகும்.
எனவே, உடனடியாக இது தொடர்பாக முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு அக்குடும்பத்தினர் கடிதம் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து முதல்வரும் அந்த போலீஸ்காரரின் நேர்மையை அங்கீகரிக்கும் வகையில். நாராயணராவை தனது வீட்டுக்கு அழைத்து நேரில் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் மகேந்தர் ரெட்டி, ஸ்பெஷல் பிராஞ்ச் இணை ஆணையர் நாகி ரெட்டி ஆகியோரும் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications