தெலுங்கானா வேட்பாளர் தேர்வுக் குழுவில் "வெளியாட்கள்".. ராகுல் முடிவால் காங். தலைவர்கள் அதிருப்தி!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபைத் தேர்தல் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய 3 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமைத்துள்ளார். இது தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், 3 பேருமே வெளி மாநிலத்தவர்கள் என்பதால்.
தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டு விட்டது. முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்காக இந்த அதிரடி முடிவை முதல்வர் சந்திரசேகர ராவ் எடுத்துள்ளா். இந்த நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். இது தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 3 பேரும் வெளி மாநிலத்தவர் ஆவர். ஒருவர் கூட தெலுங்கானாவைச் சேர்ந்தவர் கிடையாது. இதுதான் தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 3 பேரில் ஒருவர் தமிழகத்தின் ஜோதிமணி சென்னிமலை. அடுத்தவர் சர்மிஸ்தா முகர்ஜி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள். மூன்றாவது தலைவர் பக்த சரண் தாஸ், ஒடிஷாவைச் சேர்ந்த அகில இந்திய செயலாளர்.
இதுகுறித்து தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், இந்த 3 பேருக்கும் தெலுங்கானா குறித்து எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த மாநிலத்தின் அரசியல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களால் எப்படி சரியான வேட்பாளரை தேர்வு செய்ய முடியும் என்று கேட்கின்றனர்.
இன்னொரு முக்கியத் தலைவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பில் உள்ளது. அதை நழுவ விட்டு விடக் கூடாது. வேட்பாளர் தேர்வை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில் ராகுல் காந்தி தவறு செய்து விட்டார். குலாம் நபி ஆசாத், வயலார் ரவி, வீரப்ப மொய்லி போன்ற மூத்த தலைவர்களிடம் இதுபோன்ற பொறுப்பை கொடுத்திருக்கலாம். இவர்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா அரசியல் குறித்து நன்றாக தெரியும் என்றார் அவர்.
ராகுல் காந்தி என்ன செய்யப் போகிறார்?