லோக்சபாவில் மிளகு பொடி வீசிய ராஜகோபால் உட்பட 17 ஆந்திர எம்.பிக்கள் சஸ்பென்ட்
டெல்லி: லோக்சபாவில் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிளகு பொடி வீசிய ராஜகோபால் உட்பட 17 ஆந்திர மாநில எம்.பிக்களை சபாநாயகர் மீராகுமார் சஸ்பென்ட் செய்துள்ளார்.
லோக்சபாவை இன்று போர்க்களமாக்கிவிட்டனர் சீமாந்திரா எம்.பிக்கள். இன்று பெரும் அமளிக்கு இடையே லோக்சபாவில் தெலுங்கானா மசோதாவை உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தாக்கல் செய்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீமாந்திரா எம்.பி ராஜகோபால், திடீரென அவையில் மிளகு பொடியை ஸ்பிரே மூலம் வீச எம்.பிக்கள் அலறி ஓடினர். மேலும் தெலுங்குதேசம் எம்பி வேணுகோபாலோ கத்தியை காட்டி மிரட்டிக் கொண்டிருந்தார்.
இதனால் சபை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கிப் போனது. இதைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கமல்நாத் கேட்டுக் கொண்டார்.
அதன் பின்னர் சபை கூடிய போது அமளியில் ஈடுபட்ட ராஜகோபால் உட்பட 17 எம்.பிக்கள் லோக்சபாவில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இதனிடையே லோக்சபாவில் திடீரென தெலுங்குதேச எம்.பி. நாராயண ராவ் மயங்கி விழுந்தார். அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்ததாக முதலில் செய்திகள் வெளியாகின.
ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.