ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரை
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு ஆளுநர் நரசிம்மன் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானா உருவாகி உள்ளது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், ராயலசீமா, கடலோர ஆந்திரா ஆகியவற்றை உள்ளடக்கிய சீமாந்திரா பகுதியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த பகுதியை சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த முதல்வர் கிரண்குமார் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் காங்கிரசில் இருந்தும் விலகினார்.
ராஜினாமா செய்த கிரண்குமார் ரெட்டியை இடைக்கால முதல்வராக நீடிக்கும்படி ஆந்திரா ஆளுநர் கேட்டுக் கொள்ளவில்லை. ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்யும்படி அவர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருக்கிறார்.
கிரண்குமார் ரெட்டி ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநர் நரசிம்மன் ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த பரிந்துரைத்துள்ளதாக ஆந்திரா ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.