மறைந்த என்.டி.ராமாராவுக்கு பாரத்ரத்னா விருது வழங்க வேண்டும்: தெலுங்கு தேசம் தீர்மானம்
ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வரும், புகழ்பெற்ற நடிகருமான மறைந்த, என்.டி.ராமாராவுக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சி கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தெலுங்குதேசம் கட்சியின் இரு நாள் வருடாந்திர மாநாடு ஹைதராபாத் அருகேயுள்ள காந்திபேட்டை நடைபெற்று வருகிறது. மாநாட்டின் இறுதி நாளான இன்று, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மறைந்த, என்.டி.ராமாராவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. இதுகுறித்து கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறுகையில்:
ராமாராவுக்கு பாரத ரத்னா கிடைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தெலுங்கு மக்களின் ஆசை. நாட்டின் மிக உயரிய பாரதரத்னா விருதை, ராமாராவுக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியை நான் கேட்டுக்கொள்கிறேன்.
சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தது மட்டுமல்லாமல், அரசியலுக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்று முதல்வராக பதவி வகித்த ராமாராவ், ஆந்திராவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே மரியாதைக்குரிய மனிதராக விளங்கினார். எனவே அவருக்கு பாரத ரத்னா விருது அளிப்பது அனைத்து வகையிலும் பொருத்தமானதாக அமையும். ஹைதராபாத் ஏர்போர்ட்டுக்கும் ராமாராவ் பெயரை சூட்ட வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.