ரூபாவுக்கு பரவாயில்லை.. சத்யநாராயணராவுக்கு காத்திருப்போர் பட்டியல்தான்!
பெங்களூர்: பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான புகாரில் சிக்கிய சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு சிறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிறைத்துறை டிஐஜி ரூபா வழங்கிய அறிக்கையை தொடர்ந்து பெரும் புயல் வீசி வருகிறது. இந்த நிலையில், மூத்த ஓய்வு பெற்ற அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர் தனது விசாரணையை தொடக்க உள்ள நிலையில், புகார் தெரிவித்த ரூபா மற்றும் புகாருக்கு உள்ளான டிஜிபி சத்யநாராயணராவ் ஆகியோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கர்நாடக அரசு இன்று வெளியிட்டது.
ரூபாவுக்கு, சாலை போக்குவரத்து பாதுகாப்பு கமிஷனர் மற்றும் டிஐஜி பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் இருவரும் சிறைத்துறையில் பதவியில் இருப்பது சரியல்ல என்பதால் அவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடக சிறைத்துறை ஏடிஜிபியாக, ஊழல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றிய என்.எஸ்.மேக்ரிக் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் அரசுக்கு எதிராக கிளம்பும் அதிகாரிகள் தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றப்படுவார்கள். ஆனால், ரூபா விஷயத்தில் கர்நாடக அரசு பெங்களூரிலுள்ள டிராபிக் அலுவலகத்திற்குத்தான் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications