தேர்தல் ஆணையம் மீது உத்தவ் தாக்ரே பரபரப்பு குற்றச்சாட்டு.. ஜனநாயகம் காக்க கட்சிகளுக்கும் அழைப்பு
மும்பை: தேர்தல் ஆணையத்தில் ஊழல் நடந்துள்ளது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே குற்றம் சாட்டினார்.
4 லோக்சபா மற்றும் 11 சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்கள், முடிவுகள் இன்று வெளியான நிலையில், மகாராஷ்டிராவின் பால்கர் லோக்சபா தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதன் பின்னணியில் மர்மம் இருப்பதாக உத்தவ் தாக்ரே குற்றம்சாட்டினார்.
தேர்தல் ஆணையரை நியமனம் செய்ய கூடாது. தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் முறை வர வேண்டும். பாஜக வென்ற பால்கர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை தேவை. வாக்கு எண்ணும்போது கோல்மால் நடைபெற்றது. தேர்தல் முடிவு வெளியான பிறகு, வாக்கு சதவீதத்தில் மாற்றம் ஏற்பட்டது. 1 லட்சம் வாக்குகள் அதிகரித்து காட்டப்பட்டன. எனவேதான் தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டாம் என முன்கூட்டியே கோரிக்கைவிடுத்தோம். அதை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.
அனைத்து அரசியல் கட்சிகளுமே இணைந்து தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர வேண்டியது அவசியம். நமது நாட்டில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.
அதேநேரம் பாஜகவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருகிறது என்பதை இந்த தேர்தல் உணர்த்துகிறது. 15 (லோக்சபா, சட்டசபை தொகுதிகள்) தொகுதிகளில் 2ல் மட்டுமே பாஜக வென்றுள்ளது. பாஜக தனது பெரும்பான்மையை இழந்துவிட்டது.
உத்தர பிரதேசத்திலேயே பாஜக தோற்றுக்கொண்டுள்ளது. ஆனால் அதன் முதல்வர் ஆதித்யநாத், மகாராஷ்டிராவில் வந்து பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின்போது வீர சிவாஜி பற்றி இழிவுபடுத்தி அவர் பேசியதை நாங்கள் மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் என்றார் உத்தவ் தாக்ரே.