சுஷ்மா ஸ்வராஜுக்கு போன் செய்து உதவி கேட்டேன், செய்தார்: லலித் மோடி
லண்டன்: ஐபிஎல் மோசடி புகாரில் சிக்கி நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் வசித்து வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி தனக்கு பல அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மோசடி புகாரில் சிக்கியதால் நாட்டை விட்டு ஓடி இங்கிலாந்தில் வசித்து வருகிறார் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி. அத்தகையவருக்கு உதவியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீது புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் லலித் மோடியோ தனக்கு பல அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு உள்ளது என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

சுஷ்மா ஸ்வராஜ்
எனக்கு உதவி செய்த காரணத்திற்காக சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் வசுந்தரா ராஜியின் பெயர் வெளியே வந்துள்ளது. என் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. அதனால் அவரை பார்க்க நான் அவர்களின் உதவியை நாடினேன். ஆமாம் நான் சுஷ்மாஜிக்கு போன் செய்தேன். முந்தைய அரசு எனக்கு எதிராக அரசியல் சதி செய்தது என்று இங்கிலாந்து நீதிமன்றங்கள் தெரிவித்த நேரத்தில் நான் சுஷ்மாவின் உதவியை நாடினேன்.

வசுந்தரா ராஜி
புற்றுநோயால் அவதிப்பட்ட என் மனைவியை வசுந்தரா ராஜி போர்ச்சுக்கலுக்கு அழைத்துச் சென்றார். இது யாருக்கும் தெரியாது. தற்போது நான் தான் தெரிவித்துள்ளேன். எனக்கும் வசுந்தராவுக்கும் 30 ஆண்டுகள் பழக்கம் உள்ளது. இது அனைவருக்கும் தெரியும். அவர் என் குடும்பத்திற்கும், மனைவிக்கும் நெருங்கிய நண்பர் ஆவார். என் மீதான வழக்கில் அவர் சாட்சியமாக ஆஜராக ஒப்புக் கொண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர் ராஜஸ்தான் மாநில முதல்வர் ஆகிவிட்டதால் நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை. ஆனால் அவர் அளித்த வாக்குமூலங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
வசுந்ராவுக்கு நெருக்கமானவராக என்னை காங்கிரஸ் பார்க்கிறது. வசுந்தரா விளையாட்டுத் துறையில் செய்த சீர்திருத்தங்களில் நான் முக்கிய பங்காற்றியதால் என்னை பாஜகவுக்கு ஆதரவானவர் என்றும், காங்கிரஸுக்கு எதிரானவர் என்றும் பார்க்கின்றனர்.

சசி தரூர்
நேர்மையாக இருந்து வேலை இழப்பதை பார்த்து அமைதியாக என்னால் இருக்க முடியவில்லை. சசி தரூர் பொய் சொன்னதால் அவரின் வேலை பறிபோனது. கொச்சி அணி விவகாரம் குறித்து அவர் பொய் சொன்னார். அதன் பிறகு அவர் குட்டு உடைந்தது. அவர் தனது பொய்யை நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டதால் வேலை போனது. அவரது மனைவி இறந்தது தான் மிகப் பெரிய பிரச்சனை. அது பற்றி யாரும் பேச விரும்பவில்லை.

பவார், பட்டேல், சுக்லா
நான் பிரஃபுல் பட்டேல் மற்றும் சரத் பவார் ஆகியோருடன் பேசியுள்ளேன். நான் இந்தியா வந்தால் வந்த கையோடு கைது செய்யப்படுவேன் என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். நான் பயணம் செய்ய சரத் பவார், பிரஃபுல் பட்டேல், ராஜீவ் சுக்லா ஆகியோர் உதவி செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications