நாசா விண்கலங்கள் 'கேஎப்சி சிக்கன்' மாதிரி... மங்கள்யான் அம்மா உணவக இட்லி மாதிரி......."செம"!
டெல்லி: செவ்வாயில் மங்கள்யான்.. (சுருக்கமாக "செம")... இந்தியாவுக்கு உண்மையிலேயே இது செம சந்தோஷமான நாள்தான். காரணம், இந்த திட்டத்துக்காக நாம் செலவிட்ட தொகை இதுவரை மற்ற நாடுகள் செலவழித்த தொகையுடன் ஒப்பிடும்போது மிக மிகக் குறைவு.. கிட்டத்தட்ட மெக்டொனால்ட்ஸ ரேட்டுக்கும், அம்மா உணவக இட்லிக்கும் இடையிலான இடைவெளி போல.!
கண்டிப்பாக அமெரிக்காக்காரன் காதில் புகை புகையாக வரும் என்பதில் சந்தேகம் இல்லை. நாசாக்காரர்கள் எல்லாம் நம்பியார் மாதிரிதான் மாறிப் போயிருப்பார்கள் நம்மைப் பார்த்து...!
நாம் செலவிட்ட தொகையுடன் இவர்களின் தொகையை ஒப்பிட்டால் நமக்கே கூட ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அந்தக் கதையை சற்று விரிவாகப் பார்ப்போமா.....
ஒரே சாட்டிலைட்டில் 2 லாபம்!
மங்கள்யான் மூலம் இந்தியா இரண்டு லாபங்களை ஒரு சேர பார்த்துள்ளது. முதல் லாபம் - முதல் முயற்சியிலேயே செவ்வாயைத் தொட்டது. 2வது சாதனை, குறைந்த செலவில் நிறைந்த லாபத்தைப் பார்த்தது.
வெறும் 450 கோடிதான்
மங்கள்யான் திட்டச் செலவு ஜஸ்ட் 450 கோடிதான். நிச்சயம் ஏழை இந்தியர்கள் இவ்வளவு பெரிய தொகையா என்று அதிர்ச்சியுறத்தான் செய்வார்கள். ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்.. இந்தியா சூப்பர்ய்யா என்று ஆச்சரியப்பட்டு பாராட்டவே செய்வார்கள்.
நாசாவின் மாபெரும் செலவு...!
செவ்வாய் கிரக ஆய்வில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவின் தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பு .. அதாங்க நாசா... செவ்வாய் கிரக விண்கல ஏவுதல்களுக்காக செலவிட்ட தொகையைப் பார்த்தால் தலை சுற்றி கீழே விழுந்து விடுவீர்கள்.
லேட்டஸ்ட் செலவு
கடைசியாக செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்கா அனுப்பிய விண்கலத்தின் பெயர் மேவன். இதற்கான திட்டச் செலவு எவ்வளவு தெரியுமா.. 4093 கோடியே 80 லட்சத்து 45 ஆயிரத்து 500 ரூபாயாகும்.
தம்மாத்தூணட்டு செலவுதான் நம்மோடது...!
இந்த செலவில் தம்மாத்தூண்டு துண்டு மட்டுமே நமது மங்கள்யான் திட்டத்துக்காக நாம் செலவிட்டுள்ளோம்... !
நீ செலவு பண்ணு.. நான் சாதிச்சுக் காட்டுறேன்
இதன் மூலம் ஒரு புதிய வர்த்தகப் பாதைக்கு இந்தியா வழி வகுத்துள்ளது. அதாவது எதிர்காலத்தில் அமெரிக்காவை பல வழிகளில் இந்தியா ஷார்ட் கட்டில் கட்டையைக் கொடுக்கக் கூடிய பிசினஸ் வழிதான் அது. அதாவது செலவிட்டு அனுப்புவது அவர்களாக இருந்தாலும், கூட அதில் சின்ன அளவிலான முதலீட்டுடன் வெற்றியை எட்டிப் பிடிப்பது இந்தியாவாக இருக்கப் போகிறது எதிர்காலத்தில்.!
இந்தியாவை நாடப் போகும் உலக நாடுகள்
மேலும் எதிர்காலத்தில் செயற்கைக் கோள்கள் அனுப்புவதிலிருந்து பல்வேறு விண்வெளித் திட்டங்கள் வரை சீப் அண்ட் பெஸ்ட்டாக இந்தியா முடித்துக் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளதால், பல உலக நாடுகள் குறிப்பாக வளரும் நாடுகள் இந்தியாவை அதிக அளவில் நாடும் வாய்ப்புகளும் பிரகாசமாகியுள்ளன.
சிக்கணம்... !
இந்தியாவின் இந்த வியக்க வைக்கும் சாதனைகளுக்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன. அதாவது இதற்கு முன்பு பயன்படுத்திய பல தொழில்நுட்பங்களை இந்தியா முழுமையாக பயன்படுத்தியுள்ளது. மேலும் பே லோடுகளையும் முடிந்தவரை சின்னதாக்கி விட்டது. அதாவது மங்கள்யானின் மொத்த பே லோட் எடையே 15 கிலோதான். மேலும் சிறிய ரக ராக்கெட்டை வைத்து புவியின் சுற்றுப் பாதைக்கு மங்கள்யானை கொண்டு சென்றது இந்தியா. இதன் மூலம் எரிபொருள் அதிகம் விரயமாகாமல் நாம் சேமித்துள்ளோம்.
|
இந்தியத் தொழில்நுட்பம் சீப் அண்ட் பெஸ்ட்!
டெல்லியில் உள்ள பாதுகாப்பு ஆய்வு மற்றும் போதனை நிறுவன ஆய்வாளரான அஜெய் லெலே இதுகுறித்துக் கூறுகையில், இந்தியாவின் தொழில்நுட்பம் முற்றிலும் சுதேசியானது. மேலும் விலை மலிவானதும் கூட. சிறப்பான தொழில்நுட்பமும் கூட. சில புதுமைகளைப் புகுத்தி தொழில்நுட்பத்தை நாம் மேலும் வலிமையாக்கியுள்ளோம். இதுதான் இன்று நமக்கு சாதனை படைக்க கை கொடுத்துள்ளது என்கிறார்.
பட்ஜெட் பத்மநாபாக்கள்!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ எப்போதுமே பார்த்துப் பார்த்துதான் செலவு செய்யும். அனாவாசியமான செலவுகளுக்கு அது இடம் கொடுக்கவே செய்யாது. மேலும் இருக்கும் தொழில்நுட்பத்தை எந்த அளவுக்கு அதிகபட்சம் பயன்படுத்த முடியுமோ அதைச் செய்யும். அத விட முக்கியமானது கிரவுண்ட் டெஸ்டிங்.. இதில் நமது இந்திய விஞ்ஞானிகள் கில்லாடிகள்...
வாய்ப்பாடு தெரிஞ்சாதான் கணக்கு வரும் என்பது போல!
எப்படி வாய்ப்பாடு நன்றாகத் தெரிந்தால்தான் கணக்கு நன்றாக வரும் என்று கூறுவார்களோ அதேபோலத்தான் கிரவுண்ட் டெஸ்டிங் எந்த அளவுக்கு அதிகபட்சம் இருக்கிறதோ, சிறப்பாக இருக்கிறதோ, அப்போதுதான் ரிசல்ட்டும் சிறப்பாக வரும். அதில் நமது விஞ்ஞானிகள் நல்ல அனுபவசாலிகள். அதுதான் தற்போது கை கொடுத்துள்ளது.
பழைய சர்ச்சுக்குப் பக்கத்தில் !
ஒரு காலத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஆய்வுக் கூடம் எங்கு இருந்தது தெரியுமா... ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அருகே ஒரு பழைய சர்ச் கட்டடத்தில் இருந்ததாம். அங்கிருந்துதான் பல சோதனைகளையும், ஆய்வுகளையும் இந்திய விஞ்ஞானிகள் செய்துள்ளனர். அந்த இடத்திற்குப் பக்கத்தில்தான் இந்தியாவின் முதல் லாஞ்ச்சிங் பேடும் பின்னர் அமைக்கப்பட்டது. அது கூட காலத்தின் கட்டாயத்தால்தான்...!
பொக்ரானுக்குப் பிறகு வேகம் பெற்ற இஸ்ரோ
பொக்ரானில் இந்தியா முதன் முதலாக தனது அணு குண்டு சோதனையை நடத்தியதும் உலக நாடுகள் இந்தியாவுக்கு பொருளாதார தடை, ஒத்துழைப்பு தராமை போன்றவற்றை கையில் எடுத்தனர். இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்காக மத்திய அரசு தீவிர கவனம் மற்றும் முக்கியத்துவம் கொடுத்து சுயேச்சையாக சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்த முனைந்தது. இந்த காலத்தின் கட்டாயம் கா்ரணமாக சுயமாகவே நாம் ராக்கெட்களை ஏவும் லாஞ்ச்சிங் பேடுகளை அமைத்தோம்.
வருட செலவு
இந்தியா ஒரு வருடத்திற்கு தனது விண்வெளித் திட்டங்களுக்காக 7324 கோடியே 86 லட்சம் ரூபாயை செலவிடுகிறது. அதேசமயம், அமெரிக்கா தனது திட்டங்களுக்கு வருடத்திற்கு கிட்டத்தட்ட 11 லட்சம் கோடி அளவுக்கு செலவிடுவது குறிப்பிடத்தக்கது.
ராதாகிருஷ்ணன் சொல்வது என்ன...
இந்தியாவின் செலவு குறைந்த மங்கள்யான் குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், புவியின் சுற்று வட்டப் பாதையை விட்டு விண்கலத்தை வெளியே கொண்டு செல்வதற்கு சாதாரண புரபல்சன் அமைப்பை பயன்படுத்தியதே செலவு மிகவும் குறைந்ததற்கு முக்கியக் காரணம். ஒட்டு மொத்த செலவிலும் இது கணிசமாக குறைய வாய்ப்பைக் கொடுத்தது என்றார்.
இத்தனைக்கும் இஸ்ரோவில் சம்பளம் கம்மி..!
இவ்வளவு பெரிய சாதனையைச் செய்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இத்தனைக்கும் நமது அரசு குறைந்த சம்பளத்தைத்தான் தருகிறது. அதாவது சாதாரண ஒரு ஐடி ஊழியர் வாங்கும் சம்பளத்தை விட சற்றே கூடுதலாகத்தான் நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் பெறுகிறார்கள்.
மாதம் ரூ. 1 லட்சம்
இஸ்ரோவில் பணியாற்றும் நடுத்தர நிலை விஞ்ஞானிகளின் மாதச் சம்பளம் ரூ. 1 லட்சம் அளவில்தான் உள்ளதாம்.
இதுவரை 50 செயற்கைக் கோள்கள்
இந்தியா கடந்த 1975ம் ஆண்டிலிருந்து இதுவரை 50க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை அனுப்பியுள்ளது. இதில் 35 செயற்கைக் கோள்கள் தகவல் தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு, தொலையுணர்வு செயற்கைக் கோள்கள் ஆகும். கடந்த ஆண்டுதான் கடற்படைக்காக ஒரு செயற்கைக் கோளை ஏவியது. அது ஒன்றுதான் இந்தியாவின் ராணுவ செயற்கைக் கோள் ஆகும்.
மலிவு விலை செயற்கைக் கோள்களில் இந்தியா நம்பர் 1!
உலக அளவில் மிகவும் குறைந்த செலவில் செயற்கைக் கோள்கள ஏவுவதில் இந்தியாதான் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.
மொத்தத்தில் இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் செலவு குறைந்தவை அதேசமயம் சிறப்பானவை என்பதில் சந்தேகம் இல்லை!