இது இறுதித் தீர்ப்பு அல்ல...: ஜெ.வுக்கான தண்டனை குறித்து பாஜக கருத்து
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீது கடந்த 18 வருடங்களாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், ஜெயலலிதா உள்பட குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பு குறித்து பாஜக துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், ‘இது ஒன்றும் இறுதித் தீர்ப்பல்ல. நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதி தான் இது.
தனக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு ஜெயலலிதாவிற்கு உள்ளது.
இது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமாகும். ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் ஆதாரம் தேட முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது' எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, ‘தீர்ப்பின் முழு விபரத்தையும் படித்துப் பார்க்கவில்லை. இந்நிலையில், நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை' என்றார்.