காங். தலைமை மீது நம்பிக்கையில்லாதவர்கள் வெளியேறலாம்: ப.சி, மகனுக்கு திக்விஜய் 'டோஸ்'
பெங்களூரு: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தனி சுதந்திரம் வழங்க வேண்டும் என்ற கார்த்தி சிதம்பரத்தின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையில் கொள்கையை பிடிக்காதவர்கள், நம்பிக்கையில்லாதவர்கள் தாராளமாக வெளியேறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த ஞானதேசிகன் கடந்த வாரம் அந்த பதவியில் இருந்து விலகியதையடுத்து, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்கப்போவதாக திங்கட்கிழமையன்று அறிவித்தார். இதனால் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் அங்கும் இங்குமாக பிரிந்தனர்.
எனினும் ப.சிதம்பரம், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சத்தியமூர்த்தி பவனுக்கு நேரில் வந்து இளங்கோவனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இது தவிர திருநாவுக்கரசர், செல்லக்குமார், வசந்தகுமார், பிரபு, யசோதா ஆகியோரும் நேரில் ஆதரவு தெரிவித்தனர். முன்னாள் தலைவர் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வாசன் வெளியேறியதால் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதா என்று கார்த்தி சிதம்பரத்திரம் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று கேள்வி எழுப்பியது. இதற்கு கார்த்தி சிதம்பரம் பதிலளித்தார்.
அப்போது அவர், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையை சார்ந்துதான் தமிழக காங்கிரஸ் கட்சி உள்ளது. சுதந்திரமாக, தனித்து இயங்க அனுமதிக்க வேண்டும். கேரளாவில் காங்கிரஸ் கட்சி சுதந்திரமாக செயல்படுகிறது என்றார்.
அதேபோல் தலைமையுடன் ஒற்றுமையாகவும், அதேசமயம் தனித்து இயங்கவும் அனுமதிக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் கூறினார்.
டெல்லி தலைமையின் உத்தரவை எதிர்பார்த்துதான் அனைத்து முடிவுகளும் எடுக்க வேண்டியுள்ளது. இதுவே சிக்கலுக்கு காரணமாகிறது என்றும் கார்த்தி சிதம்பரம் கருத்து கூறினார். ஜி.கே.வாசன் வெளியேறியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்குக்கும் வகையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங், ஒரு கட்சியில் இருப்பவர்கள் அந்த கட்சித் தலைமையின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்களுக்கு என்று சில கொள்கைகள் உள்ளன. மாநில தலைமையை சில விஷயங்களில் சுதந்திரமாக செயல்பட விடுகிறோம். எனினும் டெல்லி தலைமைதான் முடிவெடுக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கும்.
கட்சியின் கொள்கை முடிவுகளில் நம்பிக்கை இல்லாதவர்கள், ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் தாராளமாக வெளியேறலாம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை விட்டு வாசன் வெளியேறுவது முதன் முறை அல்லவே, ஏற்கனவே 1996ல் அவர் வெளியேறியவர்தானே என்றும் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
காங்கிரஸுக்கு நேரு குடும்பத்தினர் அல்லாதவர்கள் தலைமை ஏற்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறி வரும் நிலையில், அவருக்கும் அவரது மகனுக்குக்கும் திக்விஜய் சிங் பதில் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.