நான் உயிரோடு இருக்கும் வரை இடஒதுக்கீட்டை ஒழிக்கவே முடியாது... இது 'லாலு' சபதம்
பாட்னா: தாம் உயிரோடு இருக்கும் வரை தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை எவராலும் ஒழிக்க முடியாது என்று ராஷ்டிரிய ஜனதா கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் இடஒதுக்கீட்டை மாற்ற வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் கருத்தை முன்வைத்து நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் அணி தீவிர பிரசாரம் செய்து வருகிறது.
இது தலித்துகளின் வாக்குகளை கடுமையாக பாதிக்கும் என அஞ்சும் பா.ஜ.க, இடஒதுக்கீட்டை மாற்றி அமைக்க மாட்டோம் என்று கெஞ்சாத குறையாக பேசிவருகிறது. பீகாரில் இன்று பா.ஜ.க. நிர்வாகிகளிடம் பேசிய அக்கட்சித் தலைவர் அமித்ஷா கூட, இடஒதுக்கீட்டு முறையை மாற்றி அமைக்க மாட்டோம் என்று உறுதியளித்திருந்தார்.
இதனிடையே பீகார் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் லாலு பிரசாத் யாதவ் பேசியதாவது:
பீகார் சட்டசபைக்கான எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக- மணமகனாக நாங்கள் நிதிஷ்குமாரை முன்னிறுத்தி உள்ளோம்.
ஆனால் பீகார் சட்டசபை என்கிற தேர்தலை முதல்வர் வேட்பாளர் என்கிற மணமகனே இல்லாத நிலையில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சந்திக்கிறது.
குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து பீகாரின் கிராமப்புறங்களில் பா.ஜ.க. தொண்டர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அரசியல் லாபங்களுக்காக, பா.ஜ.க. ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக மத மோதல்களை உருவாக்க சதியில் ஈடுபடுகின்றனர். ஆகையால் கட்சித் தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்.-ம் பா.ஜ.க.வும் இடஒதுக்கீட்டு முறையை ஒழிக்க துடிக்கின்றன... ஆனால் இந்த லாலு பிரசாத் உயிரோடு இருக்கும் வரை தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை ஒழித்துவிட முடியாது.
இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் பேசினார்