ஜிஎஸ்டியால் விடுதி கட்டணங்கள் கிடுகிடு உயர்வு- திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் வேதனை! - வீடியோ
திருப்பதி ஏழுமலையான் கோயில் விடுதிகளில் தங்கும் பக்தர்களும் இனி ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம், தங்கும் விடுதி அறைகளுக்கு இன்றிலிருந்து ஜிஎஸ்டி வரி விதிக்கிறது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள்.
கடந்த ஜூலை 1ஆம் தேதியில் இருந்து நாடு முழுவதும் ஒரே வரி விதிக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்துள்ளது. ஜிஎஸ்டி வரி 18- 28 சதவீதம் வரை விதிக்கப்பட்டுள்ளதால் பட்டாசு, ஜவுளி உள்ளிட்ட பல துறையைச் சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ஹோட்டல் தொழில் ஜிஎஸ்டியால் பாதிக்கப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்களும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்கும் விடுதிகளின் அறை வாடகைக்கும் ஜிஎஸ்டி வரி இன்று முதல் அமுல்படுத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம், அங்கு பக்தர்களுக்காக பல விடுதிகளை கட்டி வாடகைக்கு கொடுத்து வருகிறது. இந்த விடுதிகளில் ரூ.1000க்கு அறை எடுத்தால் 12% ஜி.எஸ்டி விதிக்கப்படும் என்றும், ரூ.1000க்கு மேல் அறைவாடகை என்றால் 18% வரி விதிக்கப்படும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் வந்து செல்லும் திருப்பதியில் தங்கும் அறைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதால், பக்தர்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.