அவ்...அவ்..மிஸ்டு காலை நம்பி அடுத்த கட்சி பிரமுகரை வேட்பாளராக அறிவித்து முகத்தில் கரிவாங்கிய பாஜக
மேற்கு வங்கத்தில் இடைத் தேர்தல் ஒன்றில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த வேட்பாளர் போட்டியிட மறுத்துவிட்டது பாஜகவை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் இடைத் தேர்தலில் தம்மை வேட்பாளராக அறிவித்த பாஜகவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மஞ்சு பாசு செம டோஸ் விட்டிருக்கிறார்.
மேற்கு வங்கத்தின் நோபோரா சட்டசபை தொகுதிக்கு வரும் 29-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுங்கியிருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. மஞ்சு பாசு அறிவிக்கப்பட்டார்.

மமதா விசுவாசி
ஆனால் மஞ்சு பாசுவோ இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக மஞ்சு பாசு வெளியிட்ட அறிக்கையில் தாம் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் தீவிர ஆதரவாளராகத்தான் இருப்பேன் என தெரிவித்திருக்கிறார்.'

டெல்லி ஷாக்
அண்மையில் பாஜகவில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராயோ, மஞ்சுபாசுவிடம் ஆலோசித்துவிட்டே அவரது பெயரை அறிவித்ததாக கூறியிருக்கிறார். பாஜகவுக்கு ஏற்பட்ட இந்த பெரும் அவமானம் டெல்லி தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இருமுறை எம்.எல்.ஏ
இது தொடர்பாக விளக்கம் தர வேண்டும் என மேற்கு வங்க பாஜகவுக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. நோபோரா தொகுதியில் 2001, 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு வென்றவர் மஞ்சு பாசு.

அரசியலுக்கு கொண்டுவந்த மமதா
2016-ம் ஆண்டு தேர்தலில் மஞ்சு பாசு தோல்வியைத் தழுவியிருந்தார். மஞ்சு பாசுவின் கணவர், திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலராக இருந்தவர். 2000-ம் ஆண்டு வன்முறையில் அவர் கொல்லப்பட்டார். இதனால் ஆசிரியராக பணிபுரிந்த மஞ்சு பாசுவை தேர்தலில் நிறுத்தி அரசியலுக்கு கொண்டு வந்தவர் மமதா பானர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்டு கால் கொடுத்தாரா மஞ்சு?
இதனிடையே பாஜக வட்டாரங்களோ, கட்சியில் உறுப்பினராக இணைய மிஸ்டு கால் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்ட எண்ணில் மஞ்சு பாசு தொடர்பு கொண்டிருந்தார். ஆகையால் அவரை கட்சி மேலிடம் அறிவித்திருக்கலாம். பாஜகவில் மஞ்சு பாசு அதிகாரப்பூர்வமாக இணையவில்லை எனவும் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications