'சஹாரா மோசடி' ராய் டைரியில் அமித் ஷா பெயர்: நாடாளுமன்றத்தில் கிளப்பிய மமதா கட்சி
டெல்லி: சஹாரா நிறுவன மோசடியில் ஈடுபட்ட அந்நிறுவன தலைவர் சுப்ரதா ராயின் டைரியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் பெயர் இருந்தது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சஹாரா நிறுவன மோசடியில் ஈடுபட்ட அந்நிறுவன தலைவர் சுப்ரதா ராயின் டைரியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் பெயர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறிக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இன்று காலை நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். அதன் பிறகு லோக்சபாவில் இந்த பிரச்சனையை திரிணாமூல் காங்கிரஸார் எழுப்பினர்.
இந்த விவகாரம் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டனர். மேலும் கேள்வி நேரத்தை ரத்து செய்யுமாறும் அவர்கள் வலியுறுத்தினர். ஆனால் கேள்வி நேரத்தை ரத்து செய்ய சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் ஒப்புக் கொள்ளவில்லை.
இதையடுத்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சுதிப் பந்தோபத்யாய செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சஹாரா மோசடியில் சிபிஐ அமித் ஷா மற்றும் சிலர் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டது. இது குறித்து பிரதமர் மோடி அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.