மக்களுக்காக ஒதுக்கிய தொகுதி நிதியை செலவழிக்காமல் வீணடிக்கும் எம்.பிக்கள்!
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது. இந்த நிலையில் நடப்பு எம்.பிக்கள் பலர் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்காமல் மிச்சம் வைத்து அது யாருக்கும் பலனில்லாமல் போகச் செய்து வருகின்றனராம்.
தமிழகத்தில் தற்போதுள்ள 39 எம்.பிக்களில் 30 பேர் தொகுதி மேம்பாட்டிற்காகஅரசு எம்.பி களுக்கு ஒதுக்கிய நிதியில் ரூபாய் 1கோடி முதல் 7 கோடி வரை செலவிடாமல் மிச்சம் வைத்திருக்கின்றனர்.
வரும் மே மாதத்திற்குள் இந்தத் தொகை செலவு செய்யப்படவில்லை என்றால் கோடிக்கணக்கில் ஒதுக்கப் பட்ட நிதி மக்களுக்குப் பயனில்லாமல் காலாவதி போய்விடும் நிலை உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களின் பதவிக்காலம் வருகின்ற மே மாதம் 15-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அந்த உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுக்குச் செலவிட அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்யப்படாமல் இருக்கின்றன.
தொகுதி மேம்பாட்டுக்கான நிதி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
முதலில் ரூ. 2 கோடி.. பின்னர் ரூ. 5 கோடி
2011-ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிறகு அதை மத்திய அரசு 5 கோடி ரூபாயாக உயர்த்தியது.
ஆளுக்கு ரூ. 19 கோடி
அதன்படி முதல் 2 வருடங்களுக்கு தலா 2 கோடி ரூபாயும், அடுத்த மூன்று வருடங்களுக்கு தலா 5 கோடி ருபாய் என்ற கணக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் கடந்த ஐந்தாண்டுகளில் 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கலெக்டருக்குப் பரிந்துரைக்கலாம்
இந்த நிதியின் மூலமாக எம்.பி.க்கள் தங்களது தொகுதியில் மேற்க் கொள்ளவேண்டிய வளர்ச்சிப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட நிர்வாகத்திற்குப் பரிந்துரை செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்த பிறகு பணிகள் தொடங்கி நிறைவேற்றப்படும்.
9 பேர்தான் ஓ.கே... 30 பேர் பாக்கி
தமிழகத்தில் உள்ள 39 உறுப்பினர்களில், 30 பேர் சராசரியாக ஒரு கோடி முதல் ஏழு கோடி வரை தொகுதி மேம்பாட்டிற்காகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் இருப்பில் வைத்திருக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மே மாதத்திற்குள் செலவழிக்காவிட்டால்
லோக்சபா பதவிக்காலம் வரும் மே மாதத்திற்குள் முடிவடைகிறது. அதற்குள் இந்தத் தொகை செலவு செய்யப்படவில்லை என்றால் கோடிக்கணக்கான நிதி மக்களுக்குப் பயனில்லாமல் காலாவதி ஆகிவிடும்.
நம்பர் ஒன் மாணிக் தாகூர்
தொகுதி வளர்ச்சிக்காக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அதிகம் செலவிடாமல் வைத்திருப்பவர்களில் தமிழக எம்.பி.க்களில் முதலிடம் பெறுபவர் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்க தாகூர் ஆவார். இன்னும் 7 கோடியே 93 லட்ச ரூபாய் செலவு செய்யாமல் வைத்து முதலிடத்தில் இருக்கிறாராம் இவர்.
2வது இடத்தில் திமுக தாமரைச்செல்வன்
அடுத்து தர்மபுரி திமுக எம்.பி. தாமரைச்செலவன் ரூ. 5.77 கோடி பாக்கி வைத்துள்ளார்.
தயாநிதி மாறன் - நெப்போலியன்
முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன் ரூ. 4.09 கோடியும், நெப்போலியன் ரூ. 3. 1 கோடியும் பாக்கி வைத்துள்ளனராம்.
மு.க.அழகிரி - ராசா
அதேபோல முன்னாள் மத்திய அமைச்சர்களான மு.க.அழகிரி ரூ. 5.3 கோடியும், ராசா, ரூ. 2.09 கோடியும் இருப்பு வைத்துள்ளனர்.
ப.சிதம்பரமே பாக்கி வைத்துள்ளார்
இவர்களுக்கல்லாம் நிதி ஒதுக்கீடு செய்யும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமே இந்த மேம்பாட்டு நிதியில் பாக்கி வைத்துள்ளார் என்பதுதான் வேடிக்கையானது. அதாவது ரூ. .4.05 கோடி அளவுக்கு செலவழிக்காமல் வைத்துள்ளாராம் சிவகங்கை ப.சிதம்பரம்.
இந்தத் தகவல்களை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்கத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.