திட்டம் ரெடி.. சரியாக நடக்குமா?.. நாளை பெரும்பான்மை பெற பாஜக என்ன செய்ய போகிறது!
நாளை பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
Recommended Video
பெங்களூர்: நாளை பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதில் பாஜகவிற்கு சாதகமான அம்சங்களை விட பாதகமான அம்சங்களே நிறைய இருக்கிறது.
தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.
இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை.
வரக்கூடாது
பாஜக நாளை சில எம்எல்ஏக்களை மஜத கட்சியில் பேசி வாக்கெடுப்பில் பங்கெடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்க உள்ளது. அதன்படி அவர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றால், பாஜக கட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் மற்றும் மஜத இரண்டு கட்சியிலும் உள்ள சில எம்எல்ஏக்களிடம் பாஜக ரகசியமாக பேசியுள்ளது.
மஜத கஷ்டம்
அதே சமயம் மஜத கட்சி எம்எல்ஏக்களிடம் இந்த யோசனை வேலைக்கு ஆகாது என்று கூறப்படுகிறது. அந்த கட்சி கடந்த 10 வருடமாக ஆட்சியில் இல்லை. இதனால் அந்த கட்சியில் இருக்கும் நபர்கள் எல்லாம் எப்படியாவது ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள். இதையும் மீறி பாஜக கட்சி 7 எம்எல்ஏக்களை தங்களுக்காக வேலை செய்ய வைக்க வேண்டும். அமித் ஷா இதற்கு என்ன திட்டம் வைத்துள்ளார் என்பது அவர்கள் கட்சியினருக்கே தெரியும்.
நடக்காது
அதேபோல் பாஜக கட்சியினரால், மற்ற கட்சியினரை எடியூரப்பாவிற்கு சார்பாக வாக்களிக்க வைக்க முடியாது. கட்சி தாவல் தடை சட்டம் மூலம் இப்படி மாற்றி வாக்களிக்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இதனால் பாஜக கட்சிக்கு ஒரே வழி, எம்எல்ஏக்களை விடுப்பு எடுக்க வைப்பதுமட்டும்தான். இரண்டு கட்சியிலும் இருக்கும் லிங்காயத்து எம்எல்ஏக்களுக்கு இதற்கு எடியூரப்பா வலை விரித்துள்ளார்.
மாட்டார்
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் மஜத, காங்கிரஸ் இரண்டு கட்சியில் உள்ள எம்எல்ஏக்களும் கண்டிப்பாக பதவி விலக மாட்டார்கள். தற்போது தேர்வாகி இருக்கும் எம்எல்ஏக்களில் மொத்தம் 90 சதவிகிதம் பேர் புதிய எம்எல்ஏக்கள். இதனால் இவர்கள் தங்கள் முதல் எம்எல்ஏ பதவியையே விட்டுக்கொடுக்கும் முடிவை எடுக்க மாட்டார்கள் என்பது உறுதியாகி உள்ளது. மீதம் உள்ள 10 சதவிகிதம் பேர், அவர்களின் கட்சியில் பாரம்பரியமாக இருக்கும் நபர்கள், அவர்களும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குமாரசாமி கணக்கு
இத்தனை பிரச்சனைகளுக்கும் இடையில் பாஜகவிற்கு எதிராக குமாரசாமி ஒரு கணக்கு வைத்துள்ளார். பாஜக கட்சியில் இருக்கும் வோக்காலிகா இன மக்களை அவர் கூறி வைத்துள்ளார். வோக்காலிகா-லிங்காயத்து பிரச்னையை அவர் பயன்படுத்திக் கொண்டு அவர்களை தங்கள் பக்கம் இழுக்க இருக்கிறார். இதனால் என்ன நடக்கும் என்பது நாளை மாலை 4 மணிக்கு பின்புதான் தெரியும்.