தீவிரவாத குழுவின் முக்கிய தலைவர் பெங்களூரில் கைது: அதிகாலையில் வீடுபுகுந்து பிடித்த போலீஸ்
பெங்களூர்: வடகிழக்கு மாநிலங்களில் அரசுக்கு எதிராக இயங்கிவரும் காரோ தேசிய விடுதலை படையின் முக்கிய தலைவரை பெங்களூரில் சுற்றிவளைத்து கைது செய்துள்ளது போலீஸ்.
மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் தீவிரவாத அமைப்பான காரோ தேசிய விடுதலை படையின் துணை தலைவர் ரபியுஷ் சங்மா. இவரை காவல்துறை தேடிவரும் நிலையில், பெங்களூர் கோரமங்களாவிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தோடு ரபியுஷ் சங்மா வசிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீசார் அதிரடியாக உள்ளே புகுந்து ரபியுஷ் சங்மாவை கைது செய்தனர்.
மேகாலயா ஐஜிபி ராஜு கூறுகையில், பெங்களூர் போலீசார் அளித்த தகவலின்பேரில் மேகாலயா காவல்துறையினர் வந்து ரபியுஷ் சங்மாவை கைது செய்தனர். வீட்டில் இருந்து சிம் கார்டுகள், ஏடிஎம் கார்டுகள், பல செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேகாலயாவில் காவல்துறை வலைவீசி தேடியதால், பெங்களூரில் வந்திருந்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார் ரபியுஷ் சங்மா என்றார்.
இதனிடையே பெங்களூர் கோர்ட்டில் ரபியுஷ் சங்மாவை ஆஜர்படுத்திவிட்டு மேகாலயாவுக்கு காவல்துறையினர் அழைத்துச் செல்ல உள்ளதாக நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திர அவுராத்கர் தெரிவித்தார்.