பேஸ்புக்கிற்கு பின்னடைவு.. வெப்சைட்டுக்கு ஏற்றமாதிரி கட்டணத்தை மாற்றக்கூடாது: டிராய் அதிரடி
டெல்லி: குறிப்பிட்ட சில வெப்சைட்டுகளுக்காக தனி சலுகைகளை இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் வழங்க கூடாது என்று இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது.
பேஸ்புக் ஃப்ரீ பேசிக்ஸ், ஏர்டெல் ஜீரோ போன்ற கவர்ச்சிகர திட்டங்கள் நாட்டில் அறிமுகமாக இருந்த நிலையில் டிராயின் உத்தரவு அந்த நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில், பேஸ்புக் பயன்படுத்த மட்டும், இணையதள சேவை நிறுவனங்கள் கட்டணத்தை குறைத்தால், பிற வெப்சைட்டுகள் பாதிக்கப்படும். இது சமநிலை போட்டியை தகர்த்துவிடும் என்பதை உணர்ந்து டிராய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிராய் இன்று வெளியிட்ட அறிவிப்புகள் இவைதான்:
*வெப்சைட்டுகளை அடிப்படையாக கொண்டு, எந்த ஒரு இணையதள சேவை வழங்கும் நிறுவனமும் கட்டணத்தை மாற்றியமைக்க கூடாது.
*எந்த ஒரு இணையதள சேவை வழங்கும் நிறுவனமும், டிராய் உத்தரவை மீறும் வகையில் எந்த ஒரு நபருடனும் ஒப்பந்தங்கள் செய்ய கூடாது.
*அவசர காலங்களில் (எமர்ஜென்சி) மட்டுமே, பாரபட்சமான வகையில் கட்டணங்களை குறைத்துக்கொள்ள அனுமதி உண்டு.
*இந்த உத்தரவை 2 வருடங்கள் கழித்து டிராய் மீண்டும் சீராய்வு செய்யும்.
*டிராய் உத்தரவு மீறப்படுவது தெரியவந்தால், அந்த இணையதள நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு டிராய் அறிவிப்பு வெளியிட்டு்ள்ளது. பேஸ்புக்கை பயன்படுத்தும்போது இணையதள கட்டணம் கிடையாது என்ற அறிவிப்போடு ஃப்ரீ பேசிக்ஸ் என்ற புதிய திட்டத்தை ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனம் கொண்டுவர இருந்தது. டிராய் உத்தரவால், அதுபோன்ற திட்டத்தை இன்னும் 2 வருடங்களுக்கு கொண்டுவர முடியாது. டிராய் மறு ஆய்வு செய்யும்போதுதான், அடுத்தகட்ட நடவடிக்கை தெரியும்.
ஏற்கனவே சுமார் 30 (வளரும்) நாடுகளில் பேஸ்புக் இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ள நிலையில், இந்தியாவில், அதனால் காலூன்ற முடியாத நிலை உருவாகியுள்ளது.