மணிப்பூரைத் தொடர்ந்து கொல்கத்தாவிலும் நில அதிர்வு: பீதியில் மக்கள்
இம்பால்: வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு மற்ற பல்வேறு பகுதிகளிலும் நிலஅதிர்வுகளாக உணரப்பட்டுள்ளன. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
மணிப்பூரைத் தொடர்ந்து கொல்கத்தாவிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனைதொடர்ந்து லேசான நிலஅதிர்வு கொல்கத்தாவிலும் உணரப்பட்டுள்ளது
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது, மியான்மர் எல்லைக் கோட்டுக்கு அருகே உருவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இம்பாலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்ராத் சிங் சம்பவ இடத்தை பார்வையிட விரைந்துள்ளார். மணிப்பூரில் நிலநடுக்க பீதி அடங்குவதற்குள், அங்கு மீண்டும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியிருந்தது.
இந்நிலையில், வடமாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலும் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், அங்குள்ள மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.