முத்தலாக்கை தடை செய்யும் சட்டம்.. கடும் எதிர்ப்புகளுக்கு இடையே லோக்சபாவில் நிறைவேற்றம்!
முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
Recommended Video
டெல்லி: முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா லோக்சபாவில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற லோக்சபாவில் முத்தலாக் சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று தாக்கல் செய்தார்.
இதில் சட்டத்துக்கு புறம்பான முறையில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும் என்ற சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
தடை சட்டத்திற்கு எதிர்ப்பு
மத்திய அரசின் இந்த சட்டத்துக்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. முத்தலாக் சட்ட மசோதாவுக்கு அகில இந்திய முஸ்லிம் மஸ் இலித் கட்சி உறுப்பினர் அசாதுதின் ஒவைசி எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அடிப்படை உரிமையை இந்த மசோதா பறிப்பதாக அசாதுதின் ஓவைசி குற்றம் சாட்டினார்.
அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு
முத்தலாக் மசோதா அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அதிமுக எம்.பி. அன்வர்ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் முத்தலாக் மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அன்வர்ராஜா கோரிக்கை விடுத்தார்.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை
லோக்சபாவில் முத்தலாக் மசோதா மீது காலை முதலே காரசார விவாதம் நடைப்பெற்றது. முத்தலாக் தடுப்பு மசோதாவில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ், அகில இந்திய முஸ்லிம் மஸ் இலித் கட்சியின் எம்பி ஓவைசி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு
இதையடுத்து முத்தலாக் தடைச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டுமா என்பது தொடர்பாக லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் திருத்தம் தேவையில்லை என வாக்களித்தனர்.
லோக்சபாவில் நிறைவேற்றம்
இதனை தொடர்ந்து முத்தலாக் தடைச்சட்டம் திருத்தம் ஏதும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த முத்தலாக் தடைச்சட்டம் ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அதிமுக பங்கேற்கவில்லை
முஸ்லிம் பெண்களின் திருமண உரிமையை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. முத்தலாக் தடைச்சட்டம் தொடர்பான வாக்கெடுப்பில் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.