ஞானவாபி மசூதியில் திரிசூலம், தாமரை அடையாளங்கள்.. ஆய்வுக்குழுவிலிருந்து நீக்கப்பட்ட அஜய்மிஸ்ரா தகவல்
வாரணாசி: ஞானவாபி மசூதி ஆய்வு தொடர்பான அறிக்கை வாரணாசி நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மசூதியில் திரிசூலம், தாமரை என சனாதான தர்ம அடையாளங்கள் இருப்பதாக ஆய்வு குழுவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவரும், இந்து மனுதாரரின் வழக்கறிஞருமான அஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலை அடுத்து ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனையும், மசூதி சுவர்களில் உள்ள கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத இதர இந்து தெய்வங்களையும் தினசரி வழிபட அனுமதிக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் 5 பெண்கள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரிக்க வாரணாசி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேலும் விசாரணை நடத்திய நீதிமன்றம் மசூதியை ஆய்வு செய்து வீடியோ பதிவு செய்ய 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.
ஞானவாபி மசூதி வழக்கு: நாளைதான் விசாரணை.. உச்ச நீதிமன்றம்.. வாரணாசி கோர்ட் விசாரிக்கவும் கட்டுப்பாடு
சிவலிங்கம் இருப்பதாக...
இந்த குழு மசூதிக்குள் ஆய்வுக்கு சென்றபோது எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை மசூதி நிர்வாகம் மறுத்தது. "அது சிவலிங்கம் இல்லை; நீரூற்று" என தெரிவித்தது. இதற்கிடையே மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாக இந்துத்துவ அமைப்பினர் கூற தொடங்கினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து மசூதி பகுதியை சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம் உத்தரவு
இதனை எதிர்த்தும், கமிஷனுக்கு தடை கோரியும், ஆய்வு முடிவுகளை வெளியிடக்கூடாது எனவும் உச்சநீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மசூதி பகுதியை சீல் வைக்கும் வாரணாசி கோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது உண்மை என்றால் அதை பாதுகாக்க வேண்டும். அதேவேளையில் தொழுகை நடத்தவும் முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இன்று விசாரணை
இதற்கிடையே மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட தகவலை வெளியில் கசிய செய்ததாக கூறி இந்து மனுதாரரர் தரப்பிலான வழக்கறிஞர் அஜய் மிஸ்ராவை கமிஷனில் இருந்து வாரணாசி நீதிமன்றம் நீக்கம் செய்தது. இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றம் மற்றும் வாரணாசியில் இதுதொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அறிக்கை தாக்கல்
அதேநேரத்தில் வாரணாசி நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சிறப்பு நீதிமன்ற கமிஷனர் விஷால் சிங், சீல் வைக்கப்பட்ட கவர் மூலம் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில் தான் இந்து மனுதாரர் தொடர்பான வழக்கறிஞரும், கமிஷனில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவருமான அஜய் மிஸ்ரா தனியார் செய்தி நிறுவனத்துக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
Recommended Video
சனாதான தர்ம அடையாளங்கள்
மசூதியின் சில இடங்களில் நான் அனுமதிக்கப்படவில்லை. உடைந்த இந்து சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 500-600 ஆண்டுகள் பழமையானதாகத் தெரிகிறது. மசூதி வளாகத்தில் ஒரு குவிமாடம் வடிவ அமைப்பு உள்ளது. இதுபற்றி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை இந்து அமைப்பினர் சிவலிங்கம் எனவும், மசூதி நிர்வாகம் நீரூற்று எனவும் கூறுகிறது. மேலும் சனாதன கலாச்சாரத்தின் பல அடையாளங்கள் மசூதிக்குள் உள்ளது. தாமரை, திரிசூலம் போன்றவை சுவர்களில் உள்ளன'' என தெரிவித்துள்ளார். இவரது இந்த பேட்டி தற்போது விவாதப்பொருளாகி உள்ளது.