ராஜ்யசபாவுக்கு போகும் பிரபல நடிகர்..? - திடீர் மீட்டிங்கின் பின்னணி என்ன? - பரபரக்கும் தகவல்கள்!
ராஜ்யசபா தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் ராஜ்யசபா எம்.பி ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானாவில் 2 எம்.பி பதவிகள் காலியாகும் நிலையில், டி.ஆர்.எஸ் கட்சியின் சார்பாக அவர் எம்.பி ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிரகாஷ் ராஜை சந்திர சேகர் ராவ் டெல்லிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் இவங்க 4 பேருக்குதான் ராஜ்யசபா எம்.பி. பதவி? ஓரிருநாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரகாஷ் ராஜ்
பெங்களூரில் பிறந்தவரான நடிகர் பிரகாஷ் ராஜ், இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து மாநில எல்லைகளைக் கடந்து புகழ்பெற்று விளங்குகிறார். சினிமாவை கடந்தும் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றவர் பிரகாஷ் ராஜ்.
தமிழ் சினிமாவில் பாலச்சந்தரால் 'டூயட்' படத்தின் மூலம் அறிமுகமான பிரகாஷ் ராஜ் தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார். வில்லன், குணச்சித்திர நடிகர் என எந்தப் பாத்திரத்தில் நடித்தாலும் பார்ப்பவர்களை ஈர்க்கும் வெகுசொற்ப நடிகர்களில் இவரும் முக்கியமானவர்.
அரசியல் பயணம்
பத்திரிகையாளரும் தனது தோழருமான கௌரி லங்கேஷ் படுகொலையைத் தொடர்ந்து, நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளில் தனது கருத்தினை முன்வைத்து வருகிறார். குறிப்பாக பா.ஜ.கவுக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலமும், செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்து வருகிறார்.
எம்.பி தேர்தலில்
நடிகர் பிரகாஷ் ராஜ், கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். அவருக்கு விசில் சின்னம் கிடைத்தது. இந்தத் தேர்தலில் அவர் வெறும் 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். அந்த தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்றார்.
நடிகர் சங்க தேர்தலிலும்
தொடர்ந்து, கடந்தாண்டு நடைபெற்ற தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ் களம் இறங்கினார்.
பிரகாஷ் ராஜுக்கு சிரஞ்சீவி, பவன் கல்யாண் உட்பட முன்னணி நடிகர்களின் ஆதரவு இருந்தது. ஆனாலும், இந்தத் தேர்தல் பிரகாஷ் ராஜ் தோல்வியடைந்தார்.
மாநிலங்களவை தேர்தல்
இந்நிலையில், நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக தெலங்கானாவின் ஒரு ராஜ்யசபா இடத்துக்கு மே 30ஆம் தேதியே இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 3 ராஜ்யசபா எம்.பி பதவிகள் காலியாக உள்ளன. காலியாகவுள்ள இந்த, சட்டமன்றத்தின் பெரும்பான்மை பலம் காரணமாக 3 எம்.பி பதவிகளையும் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியே கைப்பற்ற வாய்ப்புள்ளது.
பிரகாஷ் ராஜ் சந்திப்பு
ஓரிரு நாட்களுக்கு முன்பாக நடிகர் பிரகாஷ் ராஜ், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவை சந்தித்துப் பேசினார். சந்திரசேகர ராவின் எர்ரவல்லி பண்ணை வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதமும் முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்து பேசியுள்ளார் பிரகாஷ் ராஜ்.
கடந்த பிப்ரவரியில் மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோருடன் சந்திர சேகர் ராவ் நடத்திய சந்திப்பின்போதும் நடிகர் பிரகாஷ் ராஜ் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய அரசியலில் முக்கிய நகர்வு
இவற்றின் மூலம், தெலுங்கானாவில் இருந்து நடிகர் பிரகாஷ் ராஜ் டி.ஆர்.எஸ் சார்பாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார் என நம்பத்தகுந்த தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்து வருபவர் பிரகாஷ் ராஜ். அவரது நெற்றிப் பொட்டில் தெறிக்கும் வகையிலான கருத்துகள் மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெறுபவை. இதனால் அவரை இணைத்துக் கொண்டால் நல்லது என சந்திரசேகர் ராவ் நினைக்கிறார்.
தேசிய அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கப் போவதாக சந்திரசேகர் ராவ் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், பிரகாஷ் ராஜை எம்.பி ஆக்குவது முக்கிய நகர்வாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கின்றனர்.