ஐடி ரெய்டில் ரூ.5.7 கோடி புது நோட்டுகளுடன் சிக்கிய கர்நாடக ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
பெங்களூர்: பெங்களூருவில் ரூ.5.7 கோடி புதிய ரூ2,000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமான அதிகாரியாகும்.
பெங்களூரில் ஐடி அதிகாரிகள் சில ஐஏஎஸ் அதிகாரிகள் வீடுகளில் கடந்த சில நாட்களாக ரெய்டு நடத்தினர். அப்போது, காவிரி நீர்ப்பாசன வாரிய செயல் இயக்குநர் சிக்கராயப்பா மற்றும் மாநில நெடுஞ்சாலை வளர்ச்சி திட்ட அதிகாரி ஜயச்சந்திரா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இருந்து, 6 கோடி பணம், 7 கிலோ தங்க கட்டி, 7 கிலோ தங்க நகைகள், ரூ.20 கோடி மதிப்புள்ள லம்போகினி கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
மேலும், ரூ.5.7 கோடி புதிய ரூ2,000 நோட்டு கட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியளித்தது.
இதில் சிக்கராயப்பா, சித்தராமையாவுக்கு வேண்டப்பட்டவர். பாலிய காலத்து நண்பர் என கூறப்படுகிறது. அதேபோல ஜெயச்சந்திரா, கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் மகாதேவப்பாவுக்கு நெருக்கமான அதிகாரியாம். இதனால் இந்த ஊழலில் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு தொடர்பிருக்கலாம் என சர்ச்சை எழுந்தது.
இதனிடையே அதிகாரிகள் இருவரையும், கர்நாடக அரசு இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.