2 மாதமாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் சிக்கியிருக்கும் 2 இந்திய ஆசிரியர்கள்- கதி என்ன?
பெங்களூர்: கர்நாடகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் லிபியாவில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்கள் குறித்த தகவல் தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிரியாவில் உள்ள சிர்தே பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த நான்கு பேராசிரியர்கள் கடத்திச் செல்லப்பட்டனர்.
அவர்களில் கர்நாடகத்தைச் சேர்ந்த விஜயக்குமார் மற்றும் லட்சுமிகாந்த் ராமகிருஷ்ணா ஆகியோர் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் ஹைதராபாத்தைச் சேர்ந்த பலராம் மற்றும் கோபி கிருஷ்ணா ஆகியோர் விடுவிக்கப்படவில்லை.
சிறை பிடிக்கப்பட்டவர்கள்:
இவர்கள் ஜூலை மாதத்தின் கடைசியில், இந்தியா திரும்புவதற்காக துனிஷியாவிலிருந்து கிளம்ப எத்தனித்தபோது சிறை பிடிக்கப்பட்டனர். பலராம் ஆங்கிலப் பேராசிரியர் ஆவார். கோபிகிருஷ்ணா கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்.
கடைசியாக பார்த்தது:
இவர்கள் குறித்து தற்போது எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் என்ன ஆனார்கள், உயிருடன் இருக்கிறார்களா என்பது கூடத் தெரியவில்லை. இதுகுறித்து கோபிகிருஷ்ணாவின் அண்ணன் முரளி கிருஷ்ணா நியூஸ் மினிட்டுக்கு அளித்த பேட்டியில், கடைசியாக அவரை நாங்கள் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் பார்த்தோம். இந்தியா வந்திருந்தார்.
இந்த வருடம் பிறந்தநாள்:
பிப்ரவரி 29 ஆம் தேதிதான் அவருக்குப் பிறந்த நாள். இந்த ஆண்டு அவரது பிறந்த நாள் வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பிறந்த நாள் என்பதால் விசேஷமாக கொண்டாடுவோம். ஆனால் இந்த முறை பெரும் சோகத்தில் உள்ளோம் என்றார்.
தூதரகத்தில் இருந்து தகவல்:
பலராமின் மனைவி ஸ்ரீதேவி கூறுகையில், 3 மாதங்களுக்கு முன்பு லிபியாவின் சிர்தே மாகாணத்தில் உள்ள தீவிரவாதிகளுக்கு பாடம் சொல்லித் தருமாறு எனது எனது கணவர் உள்ளிட்டோரை தீவிரவாதிகள் கட்டாயப்படுத்துவதாக இந்தியத் தூதரகத்திலிருந்து தகவல் வந்தது.
எங்கிருக்கிறார் தெரியவில்லை:
எனது கணவரை மீட்க வேண்டும் என்று நான் சுஷ்மா சுவராஜின் தனிச் செயலாளரை தினசரி தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்து வருகிறேன். அவர் பாதுகாப்புடன் இருப்பதாக பி.ஏ கூறி வருகிறார். அதுதான் எங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. ஆனால் தனது கணவர் எங்கிருக்கிறார் என்று தனக்குத் தெரியவில்லை என்று கூறுகிறார் ஸ்ரீதே்வி.
டெல்லி செல்ல முடிவு:
இதற்கிடையே, மீண்டும் டெல்லி சென்று அதிகாரிகளைச் சந்திக்கப் போவதாக முரளிகிருஷ்ணா கூறுகிறார். மத்திய அரசிடமிருந்து அதிக அளவில் தகவல் கிடைக்காத நிலை இருப்பதாகவும் அவர் கூறுகிறார். கடத்தப்பட்ட நால்வரில் விஜயக்குமாரும், லட்சுமிகாந்த்தும் சிர்த்தே நகரிலேயே வேலை பார்த்துள்ளனர். மற்ற இருவரும் அங்கிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்லூிகளில் வேலை பார்த்துள்ளனர்.