மணிப்பூரில் இருந்து மியான்மர் சென்ற 2 தமிழர்கள் சுட்டுக் கொலை- நீதி கோரி போராட்டம்- வைகோ கண்டனம்
மோரே: மணிப்பூரின் மோரே நகரில் இருந்து மியான்மர் எல்லை நகரமாக டாமுவுக்கு சென்ற தமிழ் இளைஞர்கள் 2 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மியான்மரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு நீதி கோரி மோரேவில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இப்படுகொலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மோரேவில் தமிழர் கோவில் நிலத்தையும் உரிமை கோருகிறது மியான்மர் அரசு!
மோரே தமிழர்கள்
1960களில் முந்தைய பர்மாவான இன்றைய மியான்மரில் இருந்து தமிழ்நாட்டு தமிழர்கள் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால் பர்மாவைவிட்டு அகதிகளாக தாய்நாடான இந்தியாவுக்கு பல லட்சம் தமிழர்கள் திரும்பினர். அப்படி திரும்பிய தமிழர்களில் பலர், பர்மா வாழ்க்கையை கைவிட முடியாமல் மீண்டும் அந்நாட்டுக்கே பல்வேறு துயரங்களுக்கு இடையே செல்ல முயன்றனர். இப்படி முயற்சித்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இந்தியாவின் கடைசி சிறுநகரமான மியான்மர் எல்லையில் உள்ள மணிப்பூரின் மோரேவில் தஞ்சமடைந்தனர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்குள்ள மணிப்பூரின் பல்வேறு தேசிய இன மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர்.
மோரே- டாமு
இந்தியாவின் எல்லை நகரமான மோரேவுக்கு மியான்மரின் டாமு நகரில் இருந்து அந்நாட்டு வர்த்தகர்கள் வந்து செல்ல அனுமதி உண்டு. நமது இந்தியாவின் மோரே நகருக்குள் மியான்மர் வர்த்தகர்கள் வியாபாரம் செய்துவிட்டு மாலையில் தங்களது நாடு திரும்பிவிடுவர். அதேபோல் மோரே நகரில் இருந்து இருநாடுகளிடையேயான நட்புறவுப் பாலத்தை தாண்டிய உடனே இருக்கும் டாமு நகருக்கும் இந்தியர்கள் சென்று திரும்புவதும் வழக்கம்.
மியான்மரில் படுகொலை- போராட்டம்
இதனடிப்படையில் மோரேவில் இருந்து மோகன், அய்யனார் ஆகிய இரு தமிழர்கள் மியான்மரின் டாமு நகருக்கு சென்றனர். ஆனால் அங்கு மர்ம நபர்களால் இருவரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இருவரையும் தீவிரவாத குழு சுட்டுக் கொலை செய்தது எனவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் உளவாளிகள் என சந்தேகித்து மியான்மர் ராணுவம் படுகொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. டாமு நகருக்கு சென்ற இரு தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படுகொலையை கண்டித்து மோரே நகரில் தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு இன மக்கள் நீதி கோரி போராட்டம் நடத்தினர். இதனால் இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
வைகோ கண்டனம்
இதனிடையே மியான்மரில் இரு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய - மியான்மர் எல்லையில் உள்ள மணிப்பூரின் மோரே எனும் பகுதியில் வசித்து வந்த தமிழ்நாட்டின் ஆட்டோ ஓட்டுநரான பி.மோகன், வியாபாரியான எம்.அய்யனார் ஆகியோர் தங்கள் நண்பரைப் பார்ப்பதற்காக தாமு நகரை அடைந்தபோது, என்.எம்.ஆர். என்ற பகுதியில் பர்மிய தீவிரவாத அமைப்பினரால் வழிமறிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர். இதனைக் கண்டித்து அந்தப் பகுதியில் கடைகளும், வணிக நிறுவனங்களும், உணவகங்களும் மூடப்பட்டன. எந்தவித வாகனங்களும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு குலைந்து கிடக்கிறது. படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை காவல்துறை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது. மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் இந்தப் படுகொலையை வன்மையாக கண்டிப்பதுடன், கொலைகாரர்களை கூண்டில் ஏற்றி தண்டிக்க வேண்டும் என்றும், படுகொலைக்கு ஆளான இரண்டு தமிழர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.