ரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு ஓலா நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த உபேர்
டெல்லி: உபேர் டாக்சி நிறுவனம் ரூ. 50 கோடி நஷ்டஈடு கேட்டு ஓலா டாக்சி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
செல்போன் ஆப் மூலம் செயல்படும் டாக்சி நிறுவனங்கள் உபேர் மற்றும் ஓலா. இரு நிறுவனங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் உபேர் நிறுவனம் ஓலா மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இது குறித்து உபேர் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
ஓலா நிறுவனம் போலி கணக்குகள் துவங்கி எங்கள் நிறுவன டாக்சிகளை புக் செய்து டிரைவர்களை அலையவிட்டு அதை கேன்சல் செய்துள்ளது. இதற்காகவே ஓலா நிறுவனம் 90 ஆயிரம் போலி கணக்குகளை துவங்கியுள்ளது.
ஓலா போலி கணக்குகள் மூலம் டாக்சிகளை புக் செய்து கேன்சல் செய்ததன் மூலம் எங்கள் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் டாக்சிகளை ஓலா புக் செய்து கேன்சல் செய்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் டெல்லியில் மட்டும் அது போன்று 50 ஆயிரம் சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் 20 ஆயிரம் டிரைவர்கள் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய மறுத்துவிட்டனர்.
டாக்சிக்களை கேன்சல் செய்ததற்கான கட்டணத்தை ஓலா செலுத்தவில்லை. எனவே, ஓலா எங்களுக்கு ரூ.50 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க ஓலா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.