லோக்சபா தேர்தல்: கேரளாவில் காங். அணிக்கு கடும் பின்னடைவு- என்.டி.டி.வி. கருத்து கணிப்பு
திருவனந்தபுரம்: லோக்சபா தேர்தலில் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு கடும் பின்னடைவு ஏற்படும் என்று என்.டி.டி.வி. கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. பல மாநிலங்களில் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது வெளியாகும் கருத்து கணிப்புகள் வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை.
என்.டி.டி.வி. தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகளில் கேரளாவில் கடந்த முறையைவிட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இம்முறை பின்னடைவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்- இடதுகளுக்கு சரிபாதி
கேரளாவில் மொத்தம் 20 தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த தேர்தலில் 16 இடங்களை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. இம்முறை 10 இடங்களை மட்டுமே காங்கிரஸ் அணியால் கைப்பற்ற முடியுமாம். இதேபோல் இடதுசாரிகளுக்கும் 10 இடங்கள் கிடைக்குமாம்.

இடதுசாரிகளுக்கு ஏற்முகம்
கடந்த லோக்சபா தேர்தலில் கேரளாவில் 4 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்த இடதுசாரிகள் இம்முறை கூடுதலாக 6 இடங்களைப் பெற்று 10 தொகுதிகளில் வெல்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே மாதத்தில் தலைகீழ்
கடந்த மாதம் என்.டி.டி.வி. நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸ் அணிக்கு 13, இடதுசாரிகளுக்கு 7 தொகுதிகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஒரே மாதத்தில் நிலைமை வேறாகிப் போய்விட்டது.

ராகுலுக்கு கேரளாவில் அமோக ஆதரவு
ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என கேரளாவில் 52% ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மோடிக்கு 22% மட்டுமே..
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 22% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மன்மோகன்சிங்குக்கு 6%
தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 6%, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு 6% பேர் மட்டும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

பாஜகவை விரும்பும் ஆண்கள்
கேரளாவில் ஆண் வாக்காளர்கள் 34% பேர் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கின்றனர். 25% ஆண்கள், காங்கிரஸ் அணியை ஆதரிக்கின்றனர்.

காங்கிரஸை ஆதரிக்கும் பெண்கள்
அதே நேரத்தில் 28% பெண்கள் காங்கிரஸ் அணியையும் 26% பேர் பாஜக அணியையும் ஆதரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications