அஸ்ஸாமில் போடோ தீவிரவாதிகள் வெறிச்செயல் - 43 பழங்குடியின மக்கள் படுகொலை!
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தின் இரு மாவட்டங்களில் போடோ தீவிரவாதிகள் நடத்திய வெறிச் செயலில் 43 பழங்குடியின கிராம மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சோனித்பூர் மாவட்டத்தில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
அஸ்ஸாம் மாநிலத்தின் சோனித்பூர் பகுதியில் உள்ள மித்தலுபாஸ்தி கிராமத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள் மாலை 5 மணியளவில் கிராமத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். ராணுவ உடையில் வந்த அவர்கள், வீடுகளில் புகுந்து சரமாரியாக சுட்டனர். இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும், சோனித்பூர் மாவட்டத்தில் மேலும் 3 தாக்குதலை தீவிரவதிகள் நடத்தியுள்ளனர்.
5 இடங்களில்
இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்திலே, கோக்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பக்ரிகுரி கிராமத்திற்குள் நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 கிராமவாசிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இந்த 5 தொடர் தாக்குதலில் மொத்தம் 43பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்கள் பழங்குடியின மக்களை குறிவைத்தே நடத்தப்பட்டதாக உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்தனர்.
பழங்குடியின மக்கள்
தேயிலை தோட்டங்களில் பணி புரிந்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களே தாக்குதலில் பலியாகியுள்ளனர். இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.
மேலும் தாக்குதலில் தப்பியவர்கள் கூறும் போது, தீவிரவாதிகள் ராணுவ உடையில் வந்ததாகவும், வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் வெளியே இழுத்து வந்து சுட்டு தள்ளியதாகவும் தெரிவித்துள்ளனர்.
தனி நாடு கோரிக்கை
இது குறித்து செய்தி நிறுவனத்திடம் பேசிய தலைமை போலீஸ் அதிகாரி காஜென் சர்மா, மாநிலத்தின் ஐந்து மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.தனி நாடு கோரி வரும் போடோ இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் இத்தாக்குதல்களை நிகழ்த்தியிருக்க கூடும் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை
மேலும் போடோ லேண்ட் பகுதிகளில் தங்களின் பலத்தை காட்டும் வகையில் பிற குழுக்களை எச்சரிக்கும் விதமாகவும், தங்களின் கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளும் விதமாகவும் இத்தாக்குலை நடத்தியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பழிக்குப் பழி
கடந்த ஞாயிற்று கிழமை போடோ குழுக்களை சேர்ந்த இரு இளைஞர்கள் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டனர் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனதெரிவித்துள்ளார்.
மோடி கண்டனம்
இச்செயல் கோழைத்தனமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நிலைமை குறித்து மாநில முதல்வரிடம் பேசி வருவதாகவும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து நிலவரத்தை அறிந்த வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.