காலையிலிருந்து பந்த் சூழல்.. மாலைக்கு மேல் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிய பெங்களூர்
பெங்களூர்: பெங்களூரில் இன்று புதிதாக வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை என்றபோதிலும், அச்சத்தின் காரணமாக நாள் முழுவதுமே பந்த் போன்ற நிலை நீடித்தது. மாலையில் நகரில் மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் கன்னடர் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களால் பெங்களூரில் நேற்று கன்னட அமைப்பினர் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட தமிழக பதிவெண் வாகனங்கள் தீக்கிரையாகின. அடையார் ஆனந்தபவன், பூர்வீகா போன்ற தமிழக நிறுவனங்கள் பெங்களூரில் அடித்து நொறுக்கப்பட்டன.
இதையடுத்து மாலையில் 144 தடையுத்தரவு பெங்களூரில் அமல்படுத்தப்பட்டது. கலவரம் தொடர்ந்ததால், 16 காவல் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று இரவு, போலீஸ் வாகனத்தை கொளுத்த முயன்ற உமேஷ் என்ற 25 வயது இளைஞர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சூடுக்கு பிறகு கலவரக்காரர்கள் வயிற்றில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் போலீசார் சுட்டு கொன்றுவிடுவார்களோ என்ற அச்சத்தால் இன்று காலை முதல் நகரில் புதிதாக கலவரம் ஏதும் நடைபெறவில்லை.
அதேநேரம், கலவரம் நடைபெறும் என்ற பீதி காரணமாக, பெங்களூரில் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனஙக்ள் மூடப்பட்டிருந்தன. தியேட்டர்களில் படம் திரையிடப்படவில்லை., பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். நகர பஸ்கள் குறைந்த அளவில் மட்டுமே இயங்கின.
ஒரு சில பகுதிகளில் பத்திரிகைகளை எரித்துள்ளனர். இருப்பினும் நேற்று அளவுக்கு பெங்களூர் நிலை மோசமாகவில்லை. ஆனால் அறிவிக்கப்படாத பந்த் போன்ற நிலை பெங்களூரில் காணப்பட்டது.
மதியம் நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீரை திறந்துவிடுவது என முடிவு செய்யப்பட்டது. அப்போது, கலவரக்காரர்களை கடுமையாக ஒடுக்க உத்தரவிட்டுள்ளதாக சித்தராமையா தெரிவித்தார். இதன்பிறகு மெல்ல, மெல்ல பெங்களூர் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியது.
மாலையில் நகர பஸ்கள் இயக்கம் தொடங்கியது. கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்கப்பட தொடங்கியுள்ளன. பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட தொடங்கியுள்ளதால் அவற்றில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் போட்டுக்கொண்டனர். இருப்பினும், ஊரடங்கு உத்தரவு இன்னும் தளர்த்தப்படவில்லை. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும், நாயண்டஹள்ளி பகுதியில் தமிழக பதிவெண் லாரி ஒன்று எரிக்கப்பட்டுள்ளது.