காவிரி நீரை தர முடியாது... நேரில் சந்தித்த தமிழக விவசாயிகளிடம் சித்தராமையா திட்டவட்ட மறுப்பு
பெங்களூர்: காவிரி நீரை தற்போது திறந்துவிடவே முடியாது என்று தம்மை சந்தித்த தமிழக விவசாயிகளிடம் கர்நாடகா முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை தமிழக விவசாய சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் செல்லமுத்து, கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் இன்று சந்தித்தனர். இச்சந்திப்பின் போது தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று சித்தராமையாவிடம் கேட்டுக் கொண்டனர்.
இதற்கு பதிலளித்த சித்தராமையா, கர்நாடகாவில் போதுமான மழை இல்லாததால் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. தற்போதைய நிலையில் காவிரியில் நீர் திறந்துவிடவே முடியாது. சம்பா சாகுபடிக்கான நீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிக்கிறேன் என கூறியிருக்கிறார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.ராமலிங்கம், விவசாயத்தின் ஆரம்ப கட்டப்பணிக்கு கூட மேட்டூரில் தண்ணீர் இல்லை என்பதை கர்நாடக முதல்வரிடம் சுட்டிக் காட்டினோம். காவிரியில் இருக்கும் தண்ணீரை பகிர்ந்து அளிக்கும் படி கோரினோம்.
கர்நாடக மீது தமிழக அரசு வழக்கு தொடுத்து இருப்பது மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டத்தான் எனவும் விளக்கினோம் என்றார்.