மீராகுமாரை விமர்சிக்க லோக்சபா வீடியோ டுவிட்டரில் வெளியீடு...சீப் பப்ளிசிட்டி தேடிய சுஷ்மா ஸ்வராஜ்!
லோக்சபாவில் எதிர்க்கட்சிகளை மீராகுமார் நடத்திய விதம் என்று ஒரு வீடியோ பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டுள்ளார்.
2013ம் ஆண்டில் லோக்சபாவில் ஊழல் குற்றச்சாட்டு குறித்து பேசியபோது சபாநாயகராக இருந்த மீராகுமாரின் பேச்சு என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஒரு வீடியோவை வெளியிட்டு சீப் பப்ளிசிட்டி தேடியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள தலித் வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக தலித் வேட்பாளர் மீராகுமார் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் நாளை மறுதினம் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் முன்னாள் சபாநாயகர் மீராகுமார் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டுவிட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
மீராகுமார் பேச்சு
2013ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மக்களவை சபாநாயகராக மீரா குமார் இருந்தார். அப்போது காங்கிரஸ் அரசின் ஊழல் குறித்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் பேசியுள்ளார். அந்த 6 நிமிஷ வீடியோப் பதிவை சுஷ்மா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்.
|
நடுநிலையான சபாநாயகரா?
அதில் மன்மோகன் சிங் அரசு சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத ஊழலை செய்துள்ளதாக சுஷ்மா லோக்சபாவில் பேசுகிறார். அதற்கு மீரா குமார் சரி, ஆகட்டும், நன்றி அமருங்கள் என்று பேசுவது போலவே உள்ளதை குறிப்பிட்டு இது தான் சபாநாயர் மீராகுமார் நடுநிலையோடு சபையை நடத்திய விதம் என்று சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்.
|
60 முறை தலையீடு
மேலும் இந்த வீடியோ இணைப்போடு ஆங்கில நாளிதழ் ஒன்று சுஷ்மாவின் 6 நிமிட பேச்சில் 60 முறை தலையிட்ட மீராகுமார் என்று தலைப்பிட்ட செய்தியையும் சுஷ்மா டுவீட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஊழல் குறித்து பேசியபோது காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்ட போதும் மீராகுமார் நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என்றும் அப்போது சுஷ்மா குற்றஞ்சாட்டியிருந்தார்.
சீப் பப்ளிசிட்டி
தலித் தலைவர் மறைந்த ஜெகஜூவன் ராமின் மகள், மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையை பெற்றவர் மீராகுமார். அன்பான பேச்சால் அனைவர் மனதிலும் இடம் பிடித்தோடு, சபையை நல்ல முறையில் நடத்தியவர் என்றெல்லாம் புகழப்படுகிறார் 72 வயது எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீராகுமார். ஆனால் அவரது நற்பெயரை கெடுக்கும் விதமாக சீப் பப்ளிசிட்டி தேடும் வகையிலான பதிவை வெளியிட்டுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்.