சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: அன்புமணியிடம் தொலைபேசி மூலம் ஆதரவு திரட்டிய வெங்கய்ய நாயுடு!
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாமகவின் ஆதரவு கேட்டு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தொலைபேசியில் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாமகவின் ஆதரவைக் கோருவதற்காக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அன்புமணி ராமதாஸிடம் தொலைபேசியில் பேசி ஆதரவு கேட்டுள்ளார்.
நாட்டின் 14வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யாரை நியமிப்பது என்பது குறித்து அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தலைமையிலான குழு ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் பாஜக அல்லாத மற்ற கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் பணியில் அந்தக் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் மாநில கட்சிகளின் ஆதரவுடன் பொது வேட்பாளரை நிறுத்தும் பணியில் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூலை17ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் இன்னும் 2 தினங்களுக்குள் இறுதி செய்யப்பட்டு விடுவார்கள்.
இதனிடையே பாஜகவிற்கு ஆதரவளிக்குமாறு பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸிற்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தொலைபேசியில் ஆதரவு கோரியுள்ளார். தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸின் ஓட்டு பாஜக வேட்பாளருக்கே அளிக்க வேண்டும் என்று அப்போது கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.