8 மணி நேரம் கேட்போம்..15 நிமிடம்தான் பேசுவோம்.. மோடியை மறைமுகமாக தாக்கிய ராகுல் காந்தி!
ராஜ்கர்: மத்திய பிரதேசத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் மன் கிபாத்தை போல் இல்லாமல் நாங்கள் விவசாயிகளின் மனதில் என்ன உள்ளது என்பதை கேட்கிறோம் என்றும் 8 மணி நேரம் கேட்போம்..15 நிமிடம்தான் பேசுவோம்.. என மறைமுகமாக மோடியை தாக்கி பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி 'பாரத் ஜோடோ யாத்திரை' என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் .
கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மகாராஷ்டிரா வழியாக மத்திய பிரதேசம் வந்துள்ளார்.

பிரதமர் மோடியை சாடிய ராகுல்
சுமார் 75 நாட்களை கடந்து ராகுல் காந்தியின் பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தியுடன் வழிநெடுக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று வருகின்றனர். பாத யாத்திரைக்கு இடையே பொதுக்கூட்டங்களிலும் ராகுல் காந்தி பேசி வருகிறார். அந்த வகையில் மத்திய பிரதேசத்தின் பர்ஹன் புரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். ராகுல் காந்தி கூறியதாவது:-

மன் கிபாத்தை போல் இல்லாமல்
யாத்திரைக்கு இடையே மக்களுடன் நாங்கள் கலந்துரையாடுகிறோம். மக்களின் 'மன்கி பாத்' (மனதின் குரல்)-ஐ 8 மணி நேரம் வரை கேட்கிறோம். 15 நிமிடங்கள்தான் பேசுகிறோம். பிரதமர் மோடியின் மன் கிபாத்தை போல் இல்லாமல் நாங்கள் விவசாயிகளின் மனதில் என்ன உள்ளது என்பதை கேட்கிறோம். பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் பிரச்சினைகளை கேட்கிறோம்.

20-25 ஊழல் எம்.எல்.ஏக்களை
நாள் முழுவதும் இந்த பணிகளை செய்கிறோம். மத்திய பிரதேச மாநிலத்திற்கு வந்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது. மாநிலத்திற்கு மாநிலம், மாவட்டத்திற்கு மாவட்டம் பிரச்சினைகள் வேறுபடும். மத்திய பிரதேசத்தில் எங்கள் ஆட்சி அமைந்தது. ஆனால் பாஜக 20-25 ஊழல் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி விட்டது. இந்த யாத்திரையை நாங்கள் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினோம். பாத யாத்திரையை தொடங்கும் போது, இந்தியா 3,370 கி.மீட்டர் தொலைவு கொண்டது.

மூன்று இலக்குகளை கொண்டது
இதை யாரும் நடைபயணமாக கடக்க முடியாது என்றனர். ஆனால் இன்று நாங்கள் மத்திய பிரதேசம் வந்துள்ளோம். மத்திய பிரதேசத்தில் 370 கி.மீட்டர் நடைபயணம் செய்ய இருக்கிறோம். இந்த யாத்திரை ஸ்ரீநகர் சென்றடையும் போது நமது மூவர்ணக்கொடி அங்கு ஏற்றப்படும். இதை யாராலும் தடுக்க முடியாது. இந்த யாத்திரைக்கு பின்னால் மூன்று இலக்குகள் உள்ளன. இந்த யாத்திரை மூன்று இலக்குகளை கொண்டது.

பணவீக்கத்திற்கு எதிரானது
முதலில் இந்த யாத்திரை நாட்டில் பரப்பப்படும் வெறுப்புணர்வு, வன்முறை, பயம் ஆகியவற்றிற்கு எதிரானது. இரண்டாவதாக, இந்த யாத்திரை நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பு இன்மைக்கு எதிரானது. 3-வதாக நாட்டில் காணப்படும் பணவீக்கத்திற்கு எதிரானது. இளைஞர்கள், விவசாயிகள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள் லட்சக்கணக்கானவர்கள் இந்த யாத்திரையில் பங்கேற்பர். தொழிற்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட முக்கியமானவைகள் கூட மூன்று நான்கு தொழில் அதிபர்களிடம் உள்ளன. ரயில்வே கூட அவர்கள் கைக்கு செல்ல இருக்கிறது. இதுபோன்ற இந்தியாவை நாங்கள் விரும்பவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications