ஜாதி வாக்குகளை சாமர்த்தியமாக கவர்ந்த பாஜக.. உ.பி. வெற்றிக்கு கட்ஜு சொல்லும் காரணம்
டெல்லி: உத்தர பிரதேசத்தை ஜாதியை வைத்து எப்படி அழகாக பாஜக ஆட்டம் ஆடி வெற்றியை சமாஜ்வாதியமிடமிருந்து பறித்தது என்பதை முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேஸ்புக் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.
உ.பியில் பாஜக அமோக வெற்றி பெறும் சூழல் உருவான நிலையில் கட்ஜு பேஸ்புக்கில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் ஏற்கனவே சமாஜ்வாதி கூட்டணி வெல்லும் என கணித்திருந்தார்.
அவரது கணிப்புக்கு மாறாக பாஜக வெற்றி பெற்ற நிலையில், இதில் ஜாதி வாக்குகள் பங்களிப்பு குறித்து அவர் விவரித்துள்ளார்.
பேஸ்புக் பதிவு
கட்ஜுவின் பேஸ்புக் பதிவு: உத்தரபிரதேசத்தில் பாஜக முழுமையான வெற்றியை பெற்றுள்ளது. சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என்ற எனது கணிப்பில் தவறு நடந்துள்ளதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஜாதியை கடந்த வெற்றியா இது என்றால் இல்லை. உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களும், இந்தியாவிலேயே அதிகமாக ஜாதி பார்க்கும் மாநிலங்கள்.
ஜாதி பிரதானம்
நான் பல வருடங்கள் உத்தர பிரதேசத்தில் வாழ்ந்துள்ளதால் எனக்கு இது தெரியும். எனது கணிப்பில் தவறானது எங்கு? அதில்தான் பாஜகவின் உண்மையான வெற்றி அடைந்துள்ளஅது. யாதவர் தவிர்த்த பிற பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை தங்கள் பக்கம் ஈர்த்ததே பாஜக வெற்றிக்கு காரணம்.
பிற்படுத்தப்பட்ட ஜாதி
யாதவர்கள் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள். ஆனால் யாதவர்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட ஜாதி கிடையாது. அவர்கள் 9 சதவீதம்தான் உள்ளனர். குர்மிஸ், லோத்ஸ் உட்பட இன்னும் பல பிற்படுத்தப்பட்ட ஜாதிகளும் உள்ளன.
சமாஜ்வாதி செய்த தப்பு
அனைத்து பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் எண்ணிக்கை அம்மாநில மொத்த மக்கள் தொகையில் 40 விழுக்காடு ஆகும். இதில் யாதவர்கள் வாக்குகளை மட்டுமே சமாஜ்வாதி குறி வைத்தது. ஆனால் பாஜக எஞ்சிய சுமார் 30 சதவீத வாக்குகளை பெறுவதில் அக்கறை காட்டியது.
அமித்ஷாவின் திட்டம்
யாதவர் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்த வேட்பாளர்கள் சுமார் 130 பேர் பாஜகவின் சார்பாக போட்டியிட்டனர். இது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்றார். அமித்ஷாதான் இதுபோன்ற ஜாதி வாக்குகளை கணித்து காய் நகர்த்தியிருந்தது நினைவிருக்கலாம்.