"சிங்கம், தபாங்" ஸ்டைலில் யூனிபார்ம் போட்ட 2 போலீசார் சஸ்பெண்ட்!
ஆக்ரா: உத்திரப்பிரதேசத்தில், சிங்கம் மற்றும் தபாங் பட நடிகர்கள் போல் நிஜத்தில் யூனிபார்ம் அணிந்து பணிக்கு வந்த இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.
பொதுவாக சினிமாவில் வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் நடை, உடை, பாவனைகளை நிஜத்திலும் செய்து பார்க்க ரசிகர்கள் விரும்புவது வழக்கம். சில வகை ஆடைகள் மற்றும் அணிகலன்களுக்குக் கூட திரைப் பிரலங்களின் பெயர்கள் அல்லது திரைப்படங்களின் பெயர்கள் சூட்டப் பட்டு விற்பனை செய்யப் படுகின்றன.
பொழுதுபோக்காக இத்தகைய விசயங்கள் செய்யப்படும் போது பிரச்சினையில்லை. ஆனால், நாட்டை, மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள காவலர்கள் இருவர் நடிகர்கள் போன்று உடையணிந்து வந்ததால் பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப் பட்டுள்ள காவலர்கள் மனீஷ் சோலங்கி மற்றும் பூபேந்திரா சிங். சல்மான் கான் நாயகனாக நடித்த தபாங் மற்றும் அஜய் தேவ்கன் நாயகனாக நடித்த சிங்கம் பட ஸ்டைலில் இவர்கள் யூனிபார்ம் அணிந்து பணிக்கு வந்துள்ளனர்.
அதாவது மேற்கூறிய இரண்டு படங்களின் நாயகர்களும் படத்தில் காவலர் வேடமேற்று நடித்திருந்தனர். எனவே, அவர்களைப் போலவே காவலர்களுக்காக உடைக் கட்டுப்பாட்டை மீறி மிகவும் இறுக்கமாக, விறைப்பாக, ஸ்டைலாக உடையணிந்து சென்றுள்ளனர் மனீஷ் மற்றும் பூபேந்திரா.
இந்நிலையில், ஆக்ரா பகுதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுனில் குமார் குப்ரா நடத்திய திடீர் ரெய்டில், காவலர்கள் இருவரின் உடை விவகாரம் கண்டுபிடிக்கப் பட்டது. இதனால், மனீஷ் மற்றும் பூபேந்திரா இருவரும் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர்களின் உயரதிகாரி கூறுகையில், ‘அவர்கள் இருவரும் பணியில் நல்லவிதமாகவே நடந்து கொண்டனர்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசாரின் உடையை சரிபார்க்க உத்தரவிடப்பட்டது. அதில், சரிவர யூனிபார்ம் அணியாத நான்கு போலீசார் எச்சரிக்கப் பட்டனர். அதேபோல், மிகக் கச்சிதமான யூனிபார்ம் அணிந்து வந்ததாக 14 போலீசார் பாராட்டப் பட்டனர்.
நல்லவேளை "ஒஸ்தி வேலன்" போல டிரஸ் போடாம விட்டாங்களே!