உச்சக்கட்ட தீண்டாமை! தலித் சிறுவனை அடித்து வெளியே வீசிய ஆசிரியை.. தட்டு கொண்டு வராததால் ஆத்திரம்
கான்பூர்: உத்தரபிரதேசத்தில் தனித் தட்டு கொண்டு வராத 6 வயது தலித் சிறுவனை ஆசிரியை ஒருவர் சரமாரியாக அடித்து பள்ளியில் இருந்து வெளியே தள்ளிய சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதற்காக தனக்கு இந்தக் கொடுமை நேர்ந்தது என்பது கூட புரியாமல், அந்த பிஞ்சு சிறுவன் வலி தாங்க முடியாமல் அழுதுக் கொண்டே பேசும் வீடியோ காண்பவர்களின் நெஞ்சை கலங்கடிப்பதாக உள்ளது.
21-ம் நூற்றாண்டிலேயே இந்த அளவுக்கு தீண்டாமை கொடுமை நடக்கிறது என்றால், அந்த காலத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் சமூகத்தினர் மீது எத்தனை கொடுமைகளும், வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
வட மாநிலங்களில் தொடரும் தீண்டாமை..
நாகரீகமும், அறிவியலும் இத்தனை வளர்ச்சி கண்ட பின்னரும், இந்தியாவில் ஜாதிய தீண்டாமை சில இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருவது வெட்கக்கேடான விஷயமாக உள்ளது. தமிழகத்தில் கூட சில கிராமப்புறங்களில் இந்த தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது என்ற போதிலும், வட மாநிலங்களில் வெளிப்படையாகவும், பட்டவர்த்தனமாகவும் இந்தக் கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஜாதிய தீண்டாமைகளும், வன்கொடுமைகளும் அதிக அளவில் நடக்கின்றன. போதிய படிப்பறிவின்மை, ஆதிக்க ஜாதியினரை மையப்படுத்திய நடக்கும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்கு இதுபோன்ற தீண்டாமை பழக்கவழக்கங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
பள்ளிகளிலும் கொடுமை..
பள்ளிகளில் கூட ஆசிரியர்களே இத்தகைய தீண்டாமையை கடைப்பிடிப்பதுதான் கொடுமையில் கொடுமை. ராஜஸ்தானில் சில மாதங்களுக்கு முன்பு, வகுப்பறையில் பொதுவாக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானையை தொட்டதால் தலித் மாணவனை ஆசிரியர் கொடூரமாக தாக்கியதில் அவன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல, பரீட்சையில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற தலித் மாணவனை ஆசிரியர் அடித்துக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியது. அதுபோன்ற ஒரு மோசமான சம்பவம்தான் மீண்டும் உத்தரபிரசேத்தில் நடந்திருக்கிறது.
தலித் மாணவர்களுக்கு தனித் தட்டு..
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பானி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனித் தட்டுகளில்தான் உணவு வழங்கப்படும். இதற்கு அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தட்டுகளை எடுத்து வர வேண்டும் என்பது அங்கு எழுதப்படாத சட்டமாக இருந்துள்ளது. தீண்டாமை சட்டப்படி குற்றம் என்பது தெரிந்திருந்தும் அங்கு இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.
சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்
இந்நிலையில், அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து தட்டு எடுத்து செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது வகுப்பு ஆசிரியை, அந்த பிஞ்சு சிறுவனை பிரம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். அத்துடன் இல்லாமல், அந்த சிறுவனை வகுப்பில் இருந்து தரதரவென இழுத்துச் சென்று பள்ளியில் இருந்து வெளியே தள்ளியுள்ளார். இதனால் பயந்து போன சிறுவன் பள்ளிக்கு வெளியே ஒரு ஓரமாக நின்றுகொண்டு ஏங்கி ஏங்கி அழுதிருக்கிறான். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பெண், அந்த சிறுவனிடம் என்ன நடந்தது எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறவே, அதை அப்படியே வீடியோ எடுத்த பெண் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியை மீதும், நிர்வாகம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல்வாதிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.